கோலாலம்பூர்: சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான இணைப்பை மேம்படுத்தும் முயற்சியில் சிங்கப்பூருடானான எல்லை தாண்டிய வாடகை வாகனச் சேவையை அறிமுகப்படுத்த மலேசியா நம்பிக்கை கொண்டுள்ளது. ஆனால் அது கூட்டாகத் தொடங்கப்பட வேண்டும் என்று மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட்டிடம் முன்னர் இது குறித்துக் கலந்துரையாடப்பட்டதாக மலேசிய நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18) கூறிய லோக், ஆனால் அப்போது சிங்கப்பூர் அதுகுறித்துப் பேசத் தயாராக இருக்கவில்லை என்றார்.
எனினும், அந்தக் கலந்துரையாடல் எப்போது நடைபெற்றது என்று லோக் கூறவில்லை.
“கொள்கை அடிப்படையில், எல்லை தாண்டிய இணைப்பை மேம்படுத்த சிங்கப்பூருடன் பேச மலேசியா தயாராக இருக்கிறது. ஆனால், அதை தன்னிச்சையாக மேற்கொள்ள முடியாது,” நாடாளுமன்ற உறுப்பினர் விடுத்த கேள்விக்குப் பதிலளித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
“அதைச் செயல்படுத்த இருதரப்பும் ஏற்றுக்கொள்ள வேண்டும்,” என்று லோக் கூறியதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறியது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வாடகை வாகனச் சேவை வழியாக எல்லை தாண்டிய போக்குவரத்தை முழுமையாகத் தாராளமயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று இந்த மாதத் தொடக்கத்தில் சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.