சிங்கப்பூர் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொண்டுவரும் நிலையில், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் அன்றாட சராசரி வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.
வரும் ஆண்டுகளில் சுட்டெரிக்கும் வெயில், கடும் புயல், நீண்டகால வறட்சி ஆகியவை வழக்கமாகலாம் என்று ஆக அண்மையில் நடத்தப்பட்ட தேசிய பருவநிலை மாற்ற ஆய்வு தெரிவித்தது.
ஆக மோசமான சூழலில், தற்போது 27.9 டிகிரி செல்சியஸ் எனும் அன்றாட சராசரி வெப்பநிலை இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 32.9 டிகிரி செல்சியசுக்கு அதிகரிக்கக்கூடும். உலக அளவில் வாயுக்களின் வெளியேற்றம் தொடர்ந்து அதிகரித்தால், அன்றாட சராசரி வெப்பநிலையின் அதிகபட்ச அளவு 36.7 டிகிரி செல்சியசைத் தொடக்கூடும். தற்போது அது 31.4 டிகிரி செல்சியசாக உள்ளது.
இதனால் வெவ்வேறு தரப்பு மக்களின் சுகாதாரம் பாதிக்கப்படும். முதியோர், இளம் குழந்தைகள், வெளிப்புற இடங்களில் பணிபுரியும் ஊழியர்கள் போன்ற எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு அதிக வெப்பம் தொடர்பான நோய்கள் ஏற்படலாம்.
இந்த நூற்றாண்டுக்குள் இங்கு வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்ற நிலையில், மேலும் வெப்பமான சிங்கப்பூரைத் தவிர்க்கமுடியாது.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, ஆய்வின் கண்டுபிடிப்புகளை மரினா பே சேண்ட்ஸில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் அறிவித்தார். அதிக வெப்பநிலை, அதிக மழைநீர், நீடித்த வறட்சிகாலம் போன்ற மேலும் கடுமையான பருவநிலை சூழல்களை நாம் எதிர்கொள்ளவேண்டும் என்றார் அவர்.
இந்தச் சூழல்கள் மற்ற பருவநிலை சவால்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் திருவாட்டி ஃபூ கூறினார்.