சமயங்களுகிடையிலான ஒருமைப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் விதமாகப் பள்ளிவாசல்களுக்குப் பேரீச்சம்பழங்களைப் பரிசாக அளித்துள்ளது இந்து அறக்கட்டளை வாரியம்.
சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம்கள் இம்மாதம் (பிப்ரவரி) 19ஆம் தேதிமுதல் ரமலான் நோன்பிருக்கத் தொடங்கியுள்ளனர்.
இதனை முன்னிட்டு நோன்பு துறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஆதரவாக, இந்து அறக்கட்டளை வாரியம் சிங்கப்பூரில் உள்ள ஆறு பள்ளிவாசல்களுக்கு 720 கிலோகிராம் பேரீச்சம்பழங்களை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) வழங்கியது.
ஈகை, கருணை, பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடையாளமாகப் பேரீச்சம்பழங்கள் திகழ்கின்றன. ஒற்றுமையின் கனிகளைப் பள்ளிவாசல்களுக்கு அளித்தது குறித்து வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சரோஜினி பத்மநாதன் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இது முஸ்லிம் சமூகத்துடன் வாரியம் கொண்டுள்ள அணுக்கமான உறவு ஆண்டுதோறும் வெளிப்படும் தருணம் என்றார் அவர்.
பல இனங்கள் பல சமயத்தவரிடையே நிலவும் சமூக ஒற்றுமை, பரஸ்பர மரியாதையைப் பேணுவதில் வாரியம் அர்ப்பணிப்புடன் கூடிய கடப்பாட்டைக் கொண்டுள்ளது,’’ என்று தெரிவித்தார் திருமதி சரோஜினி.
பொதுநிகழ்வாக மாறிய சமூக நிகழ்வு
புனித ரமலான் காலத்தில் வாரியம் நோன்பு துறப்பதற்காக அளித்துள்ள பேரீச்சம்பழங்கள் இந்நிகழ்ச்சி சமயம் சார்ந்தது அன்று; சமூகம் சார்ந்த பொது நிகழ்ச்சி எனும் எண்ணத்தை அளிக்கிறது என்றார் ப’ஆல்வி பள்ளிவாசலின் தொண்டூழியர் திரு ஹாஜா மைதீன்.
‘‘முஸ்லிம்கள் நோன்பு துறப்பதற்காகச் சமூகமாக ஒன்றிணைந்து பேரீச்சம்பழங்களைத் தருவது பன்முகத்தன்மை மிளிரும் சமூகத்தின்மீது அவர்கள் கொண்டிருக்கும் ஆதரவை எடுத்துக்கட்டுகிறது. ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் ஒற்றுமையுணர்வையும் அது பறைசாற்றுகிறது என்றார் திரு ஹாஜா.
தொடர்புடைய செய்திகள்
ரமலான் மாதத்திற்காகப் பள்ளிவாசல்களுக்குப் பேரீச்சம்பழங்கள் வழங்கும் திட்டத்தை வாரியம் 2021ஆம் ஆண்டு தொடங்கியது.
இந்த ஆண்டு ப’ஆல்வி பள்ளிவாசல், பென்கூலன் பள்ளிவாசல், அப்துல் கஃபூர் பள்ளிவாசல், ஜாமிஆ சூலியா பள்ளிவாசல், அங்குலியா பள்ளிவாசல், அன்-நஹ்தா பள்ளிவாசல் உள்ளிட்ட ஆறு பள்ளிவாசல்களுக்குப் பேரீச்சம்பழங்கள் வழங்கப்பட்டன.

