சிங்கப்பூரர்கள், சுற்றுலாப் பயணிகள் இனி கடைகளில் ஒரே ஒரு தொடுதல் மூலம் மிக எளிதாகப் பணம் செலுத்தும் வகையில், வர்த்தகர்கள் தங்களின் ஆன்டிராய்ட் திறன்பேசிகளையே தொடர்பில்லாக் கட்டண முனையங்களாக மாற்றிக்கொள்ள அனுமதிக்கும் புதிய வசதியை டிபிஎஸ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
டிபிஎஸ் வங்கியின் மின்னிலக்கப் பண வசூல் செயலியான ‘டிபிஎஸ் மேக்ஸ்’ மூலம் இந்த 'டேப்-டு-போன்' வசதியை வணிகர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதன் மூலம் அவர்கள் கடன், பற்று அட்டைகளுக்கான கட்டணங்களைத் தங்களின் திறன்பேசிகள் மூலமாகவே மிக எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம்.
உள்நாட்டு மின்னிலக்கப் பணப்பைகள் இல்லாத அல்லது ரொக்கப் பணத்துக்கு பதிலாக அட்டைகள் மூலம் பணம் செலுத்த விரும்பும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இது கூடுதல் கட்டணத் தெரிவுகளை வழங்குகிறது.
வாடிக்கையாளர்கள் தங்களின் அட்டைகளை அல்லது ‘ஆப்பிள் பே’, கூகல் பணப்பை, சாம்சங் பணப்பை போன்ற என்எஃப்சி தொழில்நுட்பம் சார்ந்த செயலிகளை வர்த்தகரின் கைப்பேசியில் தொடுவதன் மூலம் தங்களின் பரிவர்த்தனைகளை வினாடிகளில் நிறைவு செய்யலாம்.
இதற்கு முன்னதாக, 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆப்பிள் நிறுவனமும் ஐஃபோன்களுக்கான இதே போன்றதொரு ‘டேப் டு பே’ வசதியைச் சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் ஒரு ‘குறைந்த ரொக்கப் பரிவர்த்தனை’ சமூகமாக மாறிவரும் வேளையில், மின்னிலக்கப் பணப்பரிவர்த்தனைகளுக்கான வளர்ந்து வரும் தேவையை வர்த்தகர்கள் எளிதில் எதிர்கொள்ள இந்த அதிரடி நடவடிக்கை பெரிதும் உதவும் என்று டிபிஎஸ் வங்கி தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. வர்த்தகர்கள் வெறும் மூன்று எளிய படிநிலைகளில் தங்களது செயலியில் இந்த வசதியைத் தொடங்கிவிடலாம்.

