அலியான்ஸ்-இன்கம் ஒப்பந்தம் நிறைவேறாமல் இருக்க காப்புறுதிச் சட்டத்தைத் திருத்தும் முடிவை அமைச்சர்களுடன் இணைந்து பிரதமர் லாரன்ஸ் வோங் எடுத்ததாக உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் நவம்பர் 6ஆம் தேதியன்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
ஜெர்மனியின் அலியான்ஸ் நிறுவனத்துக்கும் இன்கம் இன்ஷுரன்சுக்கும் இடையிலான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அக்டோபர் மாதத்தில் நாடாளுமன்றம் கூடியபோது அரசாங்கம் அறிவித்தது.
வெளிநாட்டு காப்புறுதி நிறுவனமான அலியான்சுடன் இணைந்தால் உள்ளூர் காப்புறுதி நிறுவனமான இன்கம் இன்ஷுரன்சால் அதன் சமூகப் பொறுப்புகளை ஆற்ற முடியாது என்று சிங்கப்பூரர்கள் அக்கறை தெரிவித்ததால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஒப்பந்தத்தை ரத்து செய்ய உடனடியாக சட்டத் திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அலியான்ஸ்-இன்கம் ஒப்பந்தம் குறித்து செய்தி வெளியானதும் அதுகுறித்து தாம் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் ஒப்பந்தம் தொடர்பாகத் தமது கருத்தை அமைச்சர் சண்முகம் மூலம் தெரிவித்ததாகவும் என்டியுசி இன்கம்மின் முன்னாள் தலைமை நிர்வாகி டான் சுவீ சியே தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், திரு டான் தமது பங்களிப்பையும் செல்வாக்கையும் மிகைப்படுத்தியிருக்கக்கூடும் என்று அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.
ஒப்பந்தம் குறித்து திரு டானின் கருத்துகள் உள்ளிட்டவை தமது அதிகாரத்துக்கு உட்பட்டதல்ல என்றார் அவர்.

