கிழக்கு மேற்கு பெருவிரைவு ரயில் (MRT) பாதையில் ரயில் சேவைகள் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பின.
அப்பாதையில் உள்ள தியோங் பாரு நிலையத்துக்கு அருகே பழைய ரயில் ஒன்றில் கோளாறு ஏற்பட்டதால் அது ஓடாமல் நின்றுபோனது. பிற்பகல் 12.30 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தின் காரணமாக வியாழக்கிழமையன்று (அக்டோபர் 10) ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டது.
பயணிகள் ஊட்ரம் பார்க் நிலையத்தில் பாதுகாப்பான முறையில் இறங்கினர் என்று எஸ்எம்ஆர்டி வியாழக்கிழமையன்று ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டது. கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் ரயில் சேவைகள் இயல்புநிலைக்குத் திரும்பிக்கொண்டிருப்பதாகவும் பிற்பகல் 1.14 மணிக்கு அது தெரிவித்தது.
பயணிகளுக்கு ஏற்பட்ட அசெளகரியத்துக்கு எஸ்எம்ஆர்டி மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.
ஊட்ரம் பார்க் பெருவிரைவு ரயில் நிலையத்திலிருந்து குவீன்ஸ்டவுன் நிலையம் வரை செல்வதற்கான பயண நேரம் 25 நிமிடங்கள் வரை அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதைக் கருத்தில்கொள்ளுமாறு பயணிகள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். கிழக்கு மேற்கு ரயில் பாதையில் ஏற்பட்ட ரயில் கோளாற்றால் இந்நிலை ஏற்பட்டதென எஸ்எம்ஆர்டி முன்னதாக தெரிவித்தது.