சிங்கப்பூரில் உடற்குறையுள்ள பட்டதாரிகள் பல வழிகளில் முன்னேறிச் செல்கின்றனர். அவர்களுடைய வாழ்க்கைத் தரமும் முன்பைவிட சற்று மேம்பட்டுள்ளது.
சிறப்புக் கல்வி பள்ளிகளைச் சேர்ந்த அதிக பட்டதாரிகள் வேலை, பயிற்சி, உயர் கல்வி நிலையங்களில் மேற்படிப்பு என்று முன்னேறி வருகின்றனர்.
அந்த வகையில் 2023ஆம் ஆண்டில் அவர்களில் ஏறக்குறைய 57 விழுக்காட்டினர் இந்த முன்னேற்றப் பாதையில் சென்றுள்ளனர். இது, 2016ஆம் ஆண்டில் 51.3 விழுக்காடாக இருந்தது.
கல்வி அமைச்சின் பட்டதாரி வேலைவாய்ப்பு ஆய்வு இந்த விவரங்களைத் தெரிவிக்கிறது.
எஞ்சிய பட்டதாரிகள் வயது வந்தோருக்கான உடற்குறையுள்ளோர் சேவை, பயிலரங்கு, பகல்நேர நடவடிக்கை நிலையங்கள் அல்லது வீட்டுப் பராமரிப்புக்கு பதிந்துகொண்டனர்.
டிசம்பர் 2ஆம் தேதி திங்கட்கிழமையன்று சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சின் முதல் உடற்குறைப் போக்குகள் பற்றிய அறிக்கையில் இந்த விவரங்கள் பட்டியலிடப்பட்டிருந்தன.
இந்த அறிக்கை, உடற்குறையுள்ளோர் தொடர்பான போக்குகள் பற்றியும் அவர்களுடைய பராமரிப்பாளர்கள் பற்றியும் தெரியப்படுத்துகிறது.
அனைவரையும் உள்ளடக்கிய வேலை வாய்ப்பு, வாழ்க்தைத் தரம், பராமரிப்பு ஆதரவு, உடற்குறையுள்ளோர் மீதான பொதுமக்களின் எண்ணம் உள்ளிட்டவை ஆய்வில் கண்டறியப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
உடற்குறையுள்ளோருக்கான வேலை வாய்ப்பு 2019ஆம் ஆண்டில் 28.2 விழுக்காட்டிலிருந்து 2023ஆம் ஆண்டில் 32.7 விழுக்காட்டுக்கு அதிகரித்துள்ளது என்று மனிதவள அமைச்சின் பரந்த அளவிலான ஊழியர் அணி ஆய்வு தெரிவிக்கிறது.
2023 டிசம்பர் நிலவரப்படி 19 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட ஏறக்குறைய 45,000 உடற்குறையுள்ளோர் அரசாங்கத்திற்கு அறிமுகமானவர்களாக இருக்கின்றனர்.
அதாவது, அரசாங்கத் திட்டங்கள் அல்லது சேவைகளுக்கு விண்ணப்பித்த உடற்குறையுள்ளோரை இது பிரதிபலிக்கிறது.
உடலில் வெளிப்படையான குறையுள்ளவர்கள் பொதுவான உடற்குறையுள்ளவர்களாகக் கருதப்படுகின்றனர். அந்த வகையில் அவர்கள் 34.4 விழுக்காட்டை வகிக்கின்றனர். இவர்களுக்கு அடுத்ததாக அறிவுசார் குறைபாடு உள்ளவர்கள் 19.2 விழுக்காட்டையும் கேட்கும் திறனை இழந்தவர்கள் 16 விழுக்காட்டையும் வகிக்கின்றனர் என்று அறிக்கை தெரிவித்தது.
வேலையில் சேர்ந்த உடற்குறையுள்ளோரில் பெரும்பாலோர் முழு நேர வேலையில் சேர்ந்தனர்.
அவர்களுடைய சராசரி வருமானம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து 2019ஆம் ஆண்டின் 2,630 வெள்ளியிலிந்து 2023ல் $4,242 வரை கூடியிருக்கிறது.
பட்டக் கல்வி பயின்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததே அதற்கு காரணம்.
2022, 2030க்கு இடையே இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப் பற்றி அரசாங்கம் அறிந்த உடற்குறையுள்ளோர், அவர்களுடைய பராமரிப்பாளர்களிடையே மேற்கொள்ளப்பட்ட தேசிய சமூக மன்ற ஆய்வின் கண்டுபிடிப்புகளும் அறிக்கை உள்ளடக்கியிருந்தது.
2022 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட உடற்குறையுள்ளோர் மற்றும் அனைவரையும் உள்ளடக்கும் குழுவின் ஆய்வில் உடற்குறையுள்ளோரின் வாழ்க்கைத் தரம் சற்று மேம்பட்டுள்ளதும் தெரியவந்தது.
பொது இடங்கள், பொதுப் போக்குவரத்துகளில் அவர்கள் எளிதில் அணுகக்கூடியதாக இருந்தது.