பணம் சம்பாதிப்பதற்கான ஓர் அரிய வாய்ப்பு போல அது தோன்றியது.
சிங்கப்பூர் அமைச்சர் ஒருவர் கேமரா முன்னால் தோன்றி, அதிக லாபம் தரும் கிரிப்டோகரன்சி முதலீட்டுத் திட்டத்தைப் பரிந்துரைப்பது போலத் தெரிந்தது. எனவே, 75 வயதான திரு விக்டர், இது நம்பகமானது என்று கருதினார். தனது ஓய்வுக்கால நிதியை மேலும் பெருக்க அவர் விரும்பினார்.
ஆனால், அந்த காணொளி ஒரு டீப்ஃபேக் (செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட போலியான காணொளி).
2025 ஜனவரியில், ஓய்வுபெற்ற திரு விக்டர் ஓர் அறியப்படாத எண்ணால் வாட்ஸ்அப் (WhatsApp) குழுவில் சேர்க்கப்பட்டார். அந்தக் குழுவில், உறுப்பினர்கள் லாபகரமான கிரிப்டோகரன்சி முதலீட்டுத் திட்டம் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். யாரோ ஒருவர் அந்தப் போலி காணொளியைப் பகிர்ந்துள்ளார்.
தனியுரிமைக் காரணங்களால் தனது முழுப் பெயரைத் தெரிவிக்க மறுத்த திரு விக்டர், ஓர் “அமைச்சர்“ அந்தத் திட்டத்தை விளம்பரப்படுத்துவதைப் பார்த்த பிறகு தகவலை நம்பியதாகக் கூறினார்.
புதிதாக முதலீடு செய்ய விரும்பிய அவர், அந்த காணொளியுடன் வந்த இணைப்பைச் சொடுக்கி, தனது தனிப்பட்ட விவரங்களை உள்ளிட்டு, வங்கிப் பரிமாற்றம் மூலம் $250 பதிவுக்கட்டணத்தைச் செலுத்தினார்.
சில மணிநேரங்களுக்குப் பிறகு, காயின்பேஸ் (Coinbase) நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறி ஒருவரிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. காயின்பேஸ் என்பது அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஒரு முறையான கிரிப்டோ பரிமாற்ற நிறுவனம் என்பதை அவர் தனது சொந்த ஆய்வின் மூலம் அறிந்திருந்தார்.
ஆங்கிலத்தில் பேசிய அந்த நபர், காயின்பேஸில் வர்த்தகம் செய்வதன் நன்மைகளைப் பற்றிப் பேசினார், மேலும் திரு விக்டருக்கு வழிகாட்ட ஒரு சக ஊழியர் அவரைத் தொடர்புகொள்வார் என்றும் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
ஐந்து நாட்களுக்குப் பிறகு, அந்த “சக ஊழியர்“ திரு விக்டருக்கு காணொளி அழைப்பின்மூலம் அவரது திறன்பேசி திரையைப் பகிருமாறு (share screen) கூறினார்.
அவர் திரு விக்டரை அவரது மத்திய சேம நிதி (மசேநி) மற்றும் வங்கிக் கணக்குகளில் உள்நுழையச் சொன்னார். முதலீட்டிற்குப் பணம் செலுத்துவதற்காக அவரது மசேநி சாதாரணக் கணக்கிலிருந்து (CPF Ordinary Account) $4,400ஐ வங்கிக் கணக்கிற்கு மாற்றச் சொன்னார்.
மசேநி கணக்கின் தினசரி பணமெடுப்பு வரம்பை அதிகரித்த பிறகு, 12 மணிநேரக் காத்திருப்பு காலத்திற்கு (cooling period) உட்பட்டு அந்தப் பரிமாற்றம் முடிந்தது.
ஒரு வாரம் கழித்து திரு விக்டருக்கு அவரது வங்கியிலிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது: அவரது சேமிப்புக் கணக்கிலிருந்து $3,999 எடுக்கப்பட்டிருந்தது. அந்தப் பரிமாற்றத்தை அவர் செய்யவில்லை.
சிறிது நேரத்திலேயே, அந்த நபர் மீண்டும் வீடியோ கால் செய்து திரு. விக்டருக்கு மேலும் பல லிங்குகளை அனுப்பினார். இம்முறை அவருக்குச் சந்தேகம் ஏற்பட்டது.
திரு விக்டர் அதற்கு மறுப்புத் தெரிவித்து அவரிடம் கேள்வி கேட்கத் தொடங்கினார். 30 வயதுகளில் உள்ளூர் நபர் போலத் தெரிந்த அந்த அழைப்பாளர், “வர்த்தக முடிவு“ பற்றிய தகவலுடன் மூன்று நாட்களில் மீண்டும் அழைப்பதாகக் கூறிவிட்டு சட்டென்று இணைப்பைத் துண்டித்தார்.
இது ஒரு மோசடி என்று சந்தேகித்த திரு விக்டர், தனது வங்கியைத் தொடர்புகொண்டு கணக்கை முடக்கினார். அவர் போலீசிலும் புகார் அளித்தார். இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
திரு விக்டர் $4,249-ஐ இழந்தார், ஆனால் பெரிய இழப்புகளைத் தவிர்க்கும் வகையில் இது மோசடி என்பதை முன்கூட்டியே உணர்ந்ததில் அவருக்கு நிம்மதி. “எனது முழுச் சேமிப்பையும் நான் இழந்திருக்கக்கூடும்,” என்று அவர் கூறுகிறார்.
கிரிப்டோ அடிப்படையிலான மோசடித் திட்டங்கள்
2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் பாதிக்கப்பட்ட 2,698 முதலீட்டு மோசடி பாதிக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர்.
இந்த வகை மோசடிகளில் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் வழக்குகளின் எண்ணிக்கை 19.2 சதவீதம் குறைந்திருந்தாலும், சுமார் $145.4 மில்லியன் என்ற அதிகபட்ச இழப்பு பதிவாகியுள்ளது.
ஒவ்வொரு முதலீட்டு மோசடி வழக்கிலும் இழக்கப்படும் தொகையின் அளவு அதிகரித்துள்ளதாக மோசடி பொதுக் கல்வி அலுவலகத்தின் செயல்பாட்டுத் துறையின் உதவி இயக்குநர், காவல்துறை கண்காணிப்பாளர் ரோஸி ஆன் மெக்கின்டைர் குறிப்பிடுகிறார்.
முதலீட்டு மோசடி விளம்பரங்கள் மற்றும் திரு விக்டர் சேர்க்கப்பட்டதைப் போன்ற அரட்டை குழுக்களில் காணப்படும் போலிச் சான்றுகளால் (fake testimonies) பாதிக்கப்பட்டவர்கள் ஈர்க்கப்படுகிறார்கள் என்று அவர் விளக்குகிறார்.
“ஆரம்பத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சில முதலீட்டு லாபங்கள் திரும்பக் கிடைக்கும்,” என்று கண்காணிப்பாளர் மெக்கின்டைர் கூறுகிறார். “இது அந்த முதலீட்டின் நம்பகத்தன்மையை அவர்களுக்கு உறுதிப்படுத்துகிறது, அதனால் அவர்கள் தொடர்ந்து பணத்தைப் போடுகிறார்கள்.”
சில சந்தர்ப்பங்களில், மோசடிக்காரர்கள் முதலீட்டு வாய்ப்புகளை அறிமுகப்படுத்துவதற்கு முன், நம்பிக்கையை வளர்க்க கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை எடுத்துக்கொள்கிறார்கள். “உறவைத் தக்கவைக்க, பாதிக்கப்பட்டவர்கள் பெரிய தொகைகளை முதலீடு செய்ய வற்புறுத்தப்படலாம்,” என்று அவர் கூறுகிறார்.
கிரிப்டோகரன்சி தொடர்பான மோசடிப் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளதாகச் கண்காணிப்பாளர் மெக்கின்டைர் குறிப்பிடுகிறார்.
கிரிப்டோகரன்சி என்பது ‘அதிக ஆபத்து, அதிக லாபம்’ என்ற எண்ணத்தை மோசடிக்காரர்கள் பயன்படுத்தி, “இந்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்துங்கள்” என்று கூறி, முதலீடுகளை வேகமாக வளர்க்க அதிக பணத்தைப் போடுமாறு பாதிக்கப்பட்டவர்களை வற்புறுத்துகிறார்கள் என்று அவர் விளக்குகிறார்.
2025-ஆம் ஆண்டின் முதல் பாதியில் மொத்த மோசடி இழப்புகளில் கிரிப்டோகரன்சி இழப்புகள் 17.9 சதவீதமாக (சுமார் $81.6 மில்லியன்) இருந்ததாகப் போலீஸ் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
கிரிப்டோகரன்சிகளின் பரவலாக்கப்பட்ட (decentralised) மற்றும் புனைப்பெயர் (pseudonymous) தன்மை காரணமாக, பணத்தைத் தேடுவதும் பயனாளிகளை அடையாளம் காண்பதும் விசாரணையில் பெரும் சவாலாக உள்ளது என்று கண்காணிப்பாளர் மெக்கின்டைர் கூறுகிறார்.
கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள் வேகமானவை மற்றும் மாற்ற முடியாதவை, இது பாரம்பரிய வங்கி முறைகள் மூலம் செல்லாமல் எல்லைகளைக் கடந்து பணத்தை விரைவாக நகர்த்த மோசடிக்காரர்களுக்கு வழிவகுக்கிறது.
மோசடி நடந்து ஒரு வருடம் கழிந்த நிலையிலும், “சிறந்த” முதலீட்டு வாய்ப்புகளுக்கான லிங்குகளைப் பார்க்கும்போது திரு. விக்டர் எச்சரிக்கையுடன் இருக்கிறார். “நம்ப முடியாத அளவுக்கு அது சிறப்பாக இருந்தால், நான் அதை அலட்சியம் செய்துவிடுவேன்,” என்று அவர் கூறுகிறார்.
மறைமுகமாக வரும் மோசடியின் அறிகுறிகள்
பயனீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முதலீட்டு மோசடிகளின் சில பொதுவான எச்சரிக்கை அறிகுறிகள் இங்கே உள்ளன என்று சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் (MAS) செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.
- குறைந்த அல்லது ஆபத்தே இல்லாத அதிக லாபங்கள்
உங்கள் முதலீட்டுத் தொகைக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறி அதே சமயம் அதிக லாபத்தை உறுதி செய்யும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
- கட்டாயப்படுத்தும் உத்திகள்
பாதிக்கப்பட்டவர்களை அவசரப்படுத்துவதற்காக, மோசடிக்காரர்கள் பெரும்பாலும் நேரக்கட்டுப்பாட்டு சலுகைகள், பரிசுகள் அல்லது தள்ளுபடிகளைப் பயன்படுத்துகின்றனர்.
- போலிப் பதிவுகள்
தங்களுக்குப் பல ஆண்டுகால அனுபவம், பல விருதுகள் மற்றும் சிறந்த சாதனைகள் இருப்பதாக மோசடிக்காரர்கள் கூறுகின்றனர். நம்பிக்கையை வளர்க்க “திருப்தியடைந்த வாடிக்கையாளர்களின்” சான்றுகளைச் சிலர் பயன்படுத்தலாம். முதலீட்டாளர்கள் முடிந்தவரை ஒரு சுயாதீனமான மூன்றாம் தரப்பினரிடம் இந்தத் தகவல்களைச் சரிபார்க்க வேண்டும். மோசடிகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது பற்றிய தகவலுக்கு, scamshield.gov.sg மற்றும் go.gov.sg/sureornot ஆகிய இணையதளங்களைப் பார்வையிடவும்.

