‘ஸேவியன் அன்ட் பேக்’ எனும் நாய்களுக்குப் பயிற்சி வழங்கும் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒரே நாளில் அவர்கள் இருவரும் இரண்டு நாய்களைத் தள்ளுவதையும் அடிப்பதையும் காணமுடிந்தது.
இன்ஸ்டகிராமில் அதனைக் காட்டும் காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டன. இரண்டு பயிற்றுவிப்பாளர்களும் ஒரு நாயை அடிப்பதையும் படம் எடுப்பதற்காக மற்றொரு நாயைப் பலமுறை தள்ளுவதையும் காணொளியில் காண முடிந்தது.
இணையத்தில் பரவிவரும் காணொளிகளில், நாய்களுக்கு எதிரான தகாத நடத்தை வெளிப்படுவதைக் காணமுடிவதாக அந்நிறுவனத்தின் நிறுவனர் இன்ஸ்டகிராமில் தெரிவித்தார்.
தாம் அந்தக் காணொளியில் இடம்பெறவில்லை என்றும், அந்த இரண்டு ஊழியர்களும் உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.
அத்தகைய சம்பவங்கள் இனி நடக்காமல் இருப்பதை உறுதிசெய்ய நிறுவனம் அதன் அனைத்து சேவைகளையும் உன்னிப்பாகக் கண்காணித்துவரும் என்றும் அவர் தெரிவித்தார்.