ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகத்தின் அதிநவீன முக்குளிப்பு இயந்திர மனிதனான ‘ஓஷன்ஒன்கே’, புதன்கிழமையன்று (மே 6) சிங்கப்பூர் கடல்வாழ் காட்சியக ‘ஷிப்ரெக் ஹாபிடாட்’டில் ஓர் அனுபவமிக்க முக்குளிப்பாளரைப் போன்று துல்லியமாகச் செயல்பட்டது. இது எதிர்காலத்தில் ஆழ்கடல் ஆய்வு எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு முன்னோட்டத்தை வழங்குகிறது.
300 கிலோ எடையுள்ள இந்த இயந்திர மனிதனில் எட்டு பலதிசை உந்துதல் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது குறுகிய நீருக்கடிச் சூழல்களில் துல்லியமாக நகர அனுமதிக்கிறது.
வேறோர் இடத்தில் இருந்தபடி ஒருவர் இந்த இயந்திர மனிதனை இயக்குகிறார்.
ஹாப்டிக் ஃபீட்பேக், ஸ்டீரியோஸ்கோபிக் முப்பரிமாணக் காட்சி ஆகியவற்றின் கலவையைப் பயன்படுத்தி தொலைதூரத்திலிருந்து இது இயக்கப்படுகிறது. இதன் மூலம், இயந்திர மனிதனின் கண்கள் வழியாகப் பார்ப்பதோடு மட்டுமல்லாமல், தண்ணீரின் எதிர்நீரோட்டம், பொருள்களின் அமைப்பு, அசைவு ஆகியவற்றை இயக்குபவரால் உணர முடியும்
இந்த அதிநவீன அமைப்பு, கடற்பரப்பில் உள்ள உடையக்கூடிய பொருள்களுடன் மனிதர்களைப்போல மென்மையாக தொடர்புகொள்ள அனுமதிக்கிறது.
இந்த செயல்விளக்கத்தின்போது, ஓஷன்ஒன்கே தண்ணீருக்குள் இறங்கி ஏறத்தாழ 500 கிராம் எடையுள்ள ஒரு குவளையை மீட்டெடுத்தது. நீருக்கடித் தொல்லியல் மற்றும் உள்கட்டமைப்பு ஆய்வு போன்ற பணிகளுக்கான முக்கியத் தேவையான, மென்மையான பொருள்களைக் கையாளும் அதன் திறனை இது எடுத்துக்காட்டுகிறது.
இந்த இயந்திர மனிதன் 1,000 மீட்டர் ஆழம் வரை செல்லக்கூடியது. மனித முக்குளிப்பாளர்கள் செல்ல முடியாத சூழல்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ $5 மில்லியன் செலவில் உருவாக்கப்பட்ட இது, ‘ஓஷன்ஒன்’ இயந்திர மனிதனின் அடுத்த தலைமுறையாகும்.
புதன்கிழமையன்று நடந்த இந்த பிரத்தியேகச் செயல்விளக்கத்தில் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் சிங்கப்பூரின் தேசிய மனித இயந்திரவியல் திட்டத்தின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
ஓஷன்ஒன்கே முதன்முதலில் சிங்கப்பூரில் நடைபெற்ற மிலிபோல் டெக்எக்ஸ் உச்சநிலை மாநாடு 2026ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது வியாழக்கிழமை (மே 7) வரை சிங்கப்பூர் கடல்வாழ் காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.

