நிறுவனத்தின் $8 மி. மதிப்பிலான பங்குகளை வாங்கப்போவதாக வர்த்தகர் ஒருவர் உறுதியளித்திருந்தார்.
அந்த வாக்குறுதியிலிருந்து அவர் பிறகு பின்வாங்கினார். அந்தப் பரிவர்த்தனை சட்டபூர்வமானது அல்ல, அது அனுமதிக்கப்பட்ட கொள்ளளவை மீறிய வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதி தொடர்பானது என்று அவர் வாத்திட்டிருக்கிறார்.
வாதம் நிராகரிப்பு
லீ ஹுவா எனும் அந்த வர்த்தகரின் வாதத்தை உயர் நிதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 18) நிராகரித்தது. இழப்பீடாக 7.01 மில்லியன் வெள்ளியைச் செலுத்துமாறு உயர் நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டது.
இவ்வழக்கு, உட்லண்ட்ஸ் தொழில்துறைப் பூங்காவில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதி உள்ளிட்ட சொத்துகளுக்கு உரிமை வகித்த தனது நிறுவனத்தை ஊன் கூன் செங் எனும் வர்த்தகர் 2015ஆம் ஆண்டில் விற்றதன் தொடர்பிலானது. தனது நிறுவனமான சின் ஹோங் ஹுவாவுக்குச் சொந்தமான கூன் செங் டிவெலம்மென்ட்டை ஊன் விற்றபோது இந்த சர்ச்சை எழுந்தது.
அந்தத் தங்குவிடுதியில் 320 ஊழியர்களைத் தங்கவைக்க அனுமதி இருந்தது. ஆனால், அதில் கிட்டத்தட்ட 500 ஊழியர்கள் தங்கினர்.
அத்தங்குவிடுதியில் அதிகமானோர் வசித்தது பரிவர்த்தனையில் ஈடுபட்டோருக்குத் தெரிந்திருந்ததே என்று உயர் நீதிமன்ற நீதிபதி முகம்மது ஃபைஸால் எழுத்து வடிவில் வழங்கிய தீர்ப்பில் குறிப்பட்டார். அது, தங்குவிடுதி வர்த்தகத்தில் அதிக லாபத்தை ஈட்டித்தரும் ஒன்றாகவும் விளங்கச் செய்ததாக அவர் தெரிவித்தார்.
வாக்கை நிறைவேற்றாத லீ
பரிவர்த்தனையின் ஓர் அங்கமாக ஊன் பெற்ற பங்குகளைத் தான் வாங்கப்போவதாக லீ வாக்குறுதி கொடுத்திருந்தார். அதற்கான நேரம் வந்தபோது லீ அதிலிருந்து பின்வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தப் பரிவர்த்தனை ஒப்புக்கொள்ளப்பட்டதற்கு மாறாக இருந்ததாலும் சம்பந்தப்பட்ட தங்குவிடுதி அளவுக்கதிகமான ஊழியர்களைத் தங்க வைத்து சட்டவிரோதமாக நடந்துகொண்டதாலும் பரிவர்த்தனையின் நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டதாகவும் லீ வாதிட்டார்.
நீதிபதி ஃபைஸால் லீயின் வாதங்களை நிராகரித்தார். வர்த்தகரீதியாகத் தனக்குச் சாதகமாக இருந்த ஒப்பந்தத்தை எட்டிய பிறகு அதன் மதிப்பு குறையும்போது லீ அதிலிருந்து விலகிக்கொள்ள முடியாது என்று நீதிபதி குறிப்பிட்டார்.
“பரிவர்த்தனையின் சாதகமான அம்சங்களை ஏற்றுக்கொண்ட பிரதிவாதி, அதன் குறைபாடுகளையும் ஏற்றுக்கொள்வேண்டும்,” என்று அவர் சொன்னார். லீ, ஊனுக்கு இழப்பீடாக 7,013,157.95 வெள்ளியை வழங்கவேண்டும் என்றும் நீதிபதி ஃபைஸால் உத்தரவிட்டார்.


