சுமார் 3.5 கிலோமீட்டர் தூரம் போக்குவரத்துக்கு எதிராக வாகனத்தை ஓட்டிய ஆடவருக்கு 4,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டியதாகத் தன் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை அவர் புதன்கிழமை (பிப்ரவரி 25) ஒப்புக்கொண்டார். குற்றவாளியான 25 வயது ஹெரோல்ட் ஓங்கிற்கு எல்லா வகையான வாகன ஓட்டுநர் உரிமங்களையும் வைத்துக்கொள்வதற்கு எதிராக ஒன்றரை ஆண்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி தெம்பனிஸ் அவென்யூ 10ல் அதிகாலை 12.40 மணியளவில் அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டது. அவரின் செயலால் வேறோர் ஓட்டுநர் மற்றொரு சாலைத் தடத்துக்கு மாறிக்கொள்ள வேண்டியிருந்ததாக ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து அன்றைய தினம் அதிகாலை ஒரு மணியளவில் தங்களுக்குப் புகார் கிடைப்பதற்கு முன்னரே ஓங் அவ்விடத்திலிருந்து சென்றுவிட்டதாகக் காவல்துறை முன்னதாக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது. விசாரணை, போக்குவரத்து கேமரா ஆகியவற்றின் மூலம் காவல்துறையினர், ஓங்கின் அடையாளத்தைத் தெரிந்துகொண்டு அவரைப் பின்னர் கைது செய்தனர்.

