போதைப்பொருள் ஒழிப்பு இயக்கமான டிரக்ஃப்ரிஎஸ்ஜியின் (DrugFreeSG) வருடாந்தர ஒளியூட்டை ஒட்டி நாடாளுமன்ற கட்டடம், மரினா பே சேண்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களில் பச்சை, வெள்ளை விளக்குகள் மிளிர்ந்தன.
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தத் திட்டம், போதைப்பொருள் புழக்கத்திற்கும் கடத்தலுக்கும் எதிரான அனைத்துலக தினத்தையும் குறிக்கிறது.
போதைப்பொருள் எதிர்ப்பைப் பச்சை, வெள்ளை நாடா குறிப்பதால் அந்த வண்ணங்களின் ஒளி, இரவு 7.30 முதல் நள்ளிரவு வரை, தீவு முழுவதுமுள்ள 48 கட்டடங்களிலும் பொது இடங்களிலும் ஊட்டப்பட்டது.
நாடாவின் பச்சை நிறம், ஆரோக்கியத்தையும் வெள்ளை நிறம், வலிமையையும் குறிக்கின்றன.
இவ்வாண்டின் ஒளியூட்டில் சிங்கப்பூர் தேசிய கலைக்கூடம், ஃபுலர்ட்டன் மரபு வட்டாரம் புதிதாக இணைகின்றன.
எட்டாவது முறையாக செயல்படும் இந்த இயக்கம், போதைப்பொருள் புழக்கத்தின் பேராபத்துகளைப் பற்றி விழிப்பூட்ட முனைகிறது.
டிரக்ஃப்ரிஎஸ்ஜி இயக்கம் தொடங்கப்பட்ட வருடமான 2018ல் 3,439 போதைப்புழங்கிகள் கைது செய்யப்பட்டதாகப் பதிவாகியுள்ளன. 2024ல் அந்த எண்ணிக்கை 3,175க்கு குறைந்தது.
ஒட்டுமொத்த போதைப்பொருள் புழங்கிகளின் கைது எண்ணிக்கை, கிட்டத்தட்ட எட்டு விழுக்காடு குறைந்தது.
தொடர்புடைய செய்திகள்
இருந்தபோதும் 20 வயதுக்கும் குறைவான புதிய போதைப்பொருள் புழங்கிகளின் எண்ணிக்கை 2023ல் 38 விழுக்காடு கூடியுள்ளது.
போதைப்பொருள் புழக்கத்தின் முன்தடுப்பு நடவடிக்கையில் ஒளியூட்டு அங்கம் வகிக்கிறது.