சிங்கப்பூரில் டிசம்பர் முதல் வாரம் வறண்ட வானிலையை எதிர்பார்க்கலாம் என்றும் ஆனால் இரண்டாம் வாரத்தில் மீண்டும் மழை பெய்யும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் இரண்டாம் வாரத்தில் பெரும்பாலான நாள்களில் பிற்பகலில் மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழை வரை பெய்யக்கூடும். சில நாள்களில் இரவு வரை மழை நீடிக்கக்கூடும் என்கிறது வானிலை ஆய்வகம்.
டிசம்பர் 2ஆம் தேதி அது வெளியிட்ட அறிக்கையில், அடுத்த இரண்டு வாரங்களுக்கான அன்றாட வெப்பநிலை பெரும்பாலான நாள்களில் 32 டிகிரி செல்சியசுக்கும் 34 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று கூறியுள்ளது. சில நாள்களில் வெப்பநிலை 34 டிகிரி செல்சியசுக்குமேல் பதிவாகக்கூடும்.
நவம்பர் மாதப் பிற்பகுதியில் பெரும்பாலான நாள்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததைக் குறிப்பிட்ட வானிலை ஆய்வகம், அட்மிரல்டி, பாசிர் ரிஸ் வட்டாரங்களில் சராசரிக்குமேல் 185 விழுக்காட்டு மழை பெய்ததாகக் கூறியது.

