சிங்கப்பூருக்குச் சொந்தமான தென்தீவுகளுக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் கடந்த வாரம் உல்லாசப் படகு ஒன்று மூழ்கியது. அதை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் வேளையில், காணாமல் போன நபரைத் தேடும் பணி நான்காவது நாளாகத் தொடர்கிறது.
மார்ச் 27ஆம் தேதி அதிகாலை 4:15 மணியளவில் சரக்கு விநியோகக் கப்பலுடன் மோதிய அந்த உல்லாசப் படகில் இருந்த மூன்று நபர்களில் ஒருவரே இந்த மாயமான நபர் என்று சிங்கப்பூர் கடல்துறை மற்றும் துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது.
சுற்றுக்காவல் படகுகள், கடலோரக் காவல் படை மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் கடல் பிரிவைச் சேர்ந்த குழுக்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஆணையம் கூறியது.
சரக்கு விநியோகக் கப்பலில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவரின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருவதாகவும் ஆணையம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.

