பொதுத் தேர்தலுக்குமுன் தொகுதி எல்லைகளை மறுஆய்வு செய்யும் ‘இபிஆர்சி’ எனப்படும் தேர்தல் தொகுதி எல்லை மறுஆய்வுக் குழு இன்னும் கூட்டப்படவில்லை என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் கேள்வி ஒன்றுக்கு ஜூலை 2ஆம் தேதி எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
அந்தக் குழு கூட்டப்படும்போது அதற்கான குறிப்பு விதிமுறைகள் வரையறுக்கப்படும் என்றார் அவர்.
பாட்டாளிக் கட்சியின் செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் சுவா, ‘இபிஆர்சி’ குழுவுக்குக் குறிப்பு விதிமுறைகள் வழங்கப்பட்டுவிட்டனவா என்று கேள்வி எழுப்பியிருந்தார். எந்தக் கொள்கைகளின் அடிப்படையில் இந்தக் குறிப்பு விதிமுறைகள் வரையறுக்கப்படுகின்றன என்றும் அவர் கேட்டிருந்தார்.
முந்தைய ‘இபிஆர்சி’ குழுக்களின் குறிப்பு விதிமுறைகளின் அடிப்படையில் இக்குழு தேர்தல் தொகுதி எல்லைகளை மறுஆய்வு செய்து, தொகுதிகளின் பரப்பு, குழுத்தொகுதிகள், தனித்தொகுதிகளின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பரிந்துரைக்கும் என்று அமைச்சர் சான் கூறினார்.
பிரதமர் லாரன்ஸ் வோங்கின் சார்பாக அமைச்சர் சான் இவ்வாறு பதிலளித்தார்.