தேவைக்கு ஏற்பக் கட்டப்படும் (பிடிஓ) வீடுகளுக்காகக் காத்திருக்கும் குடும்பங்கள், இளம் தம்பதியர் ஆகியோருக்கான வாடகைப் பற்றுச்சீட்டுத் திட்டம் இவ்வாண்டு இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் திங்கட்கிழமை (ஜூன் 16) வெளியிட்டது.
தங்கள் பிடிஓ வீடுகளுக்காகக் காத்திருக்கும் காலகட்டத்தில் வாடகை வீடுகளில் சில குடும்பங்களும் இளம் தம்பதியரும் தங்குகின்றனர்.
வீட்டு வாடகைச் செலவினத்தைக் குறைக்க இந்த வாடகைப் பற்றுச்சீட்டுத் திட்டம் உதவுகிறது.
வாடகைப் பற்றுச்சீட்டுத் திட்ட நீட்டிப்பால் ஏறத்தாழ 200 குடும்பங்கள் பலனடையும் என்று வீவக தெரிவித்தது.
வீட்டு உரிமையாளர்களிடம் நேரடியாக வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கும் குடும்பங்களுக்குப் பெற்றோர் தற்காலிக வீட்டுத் திட்ட பற்றுச்சீட்டுகளை வீவக வழங்குகிறது.
தகுதி பெறும் குடும்பங்களுக்கு மாதந்தோறும் $300 வழங்கப்படுகிறது.
இவ்வாண்டு ஜூலை மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை வாடகைச் செலவினத்தை ஈடுசெய்ய இத்தொகை தரப்படுகிறது.
நீட்டிப்புக்கு முன்பு, இவ்வாண்டு ஜூன் மாதம் வரையிலான வாடகைக்கு மட்டும் இத்தொகை வழங்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டு இறுதிக்குள் பெற்றோர் தற்காலிக வீட்டுத் திட்ட வீடுகளின் எண்ணிக்கையை வீவக உயர்த்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டில் அத்தகைய வீடுகளின் எண்ணிக்கை 800 மட்டுமே.
வாடகைப் பற்றுச்சீட்டுத் திட்டத்துக்குத் தகுதி பெற குடும்பத்தின் மாத வருமானம் $7,000 அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
வீட்டை வாடகைக்கு விடும் வீட்டு உரிமையாளர்கள் அதுகுறித்து வீவகவிடம் பதிவு செய்ய வேண்டும்.
வாடகை வீட்டில் தங்குவோரின் அடையாள அட்டைகளில் புதிய முகவரி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
பெற்றோர் தற்காலிக வீட்டுத் திட்ட வீடுகளில் தற்போது வசித்து வரும் குடும்பங்கள் வீட்டு உரிமையாளர்களிடமிருந்து வீட்டை வாடகைக்கு எடுக்கலாம்.
பெற்றோர் தற்காலிக வீட்டுத் திட்ட குத்தகைக்காலம் முடிந்ததும் அத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் பற்றுச்சீட்டுகளைப் பெற விண்ணப்பம் செய்யலாம்.
மேல் விவரங்களுக்கு வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் இணையப்பக்கத்தை நாடலாம்.