கொள்கலன் சேவை நிறுவனம் ஒன்றில் பணியின்போது செருப்பு அணிந்திருந்த செயல்பாட்டு மேலாளர் ஒருவர்மீது 2018 நவம்பரில் ஏறக்குறைய 577 கிலோகிராம் எடைகொண்ட ரப்பர் விரிப்புகள் விழுந்ததில் அவர் உயிரிழந்தார்.
அவருடைய சகப் பணியாளரான லிம் சூன் ஹுவீ, இறந்தவரின் உடலுக்கு அருகே பாதுகாப்புக் காலணியை வைத்து, அவர் அணிந்திருந்த செருப்பை அகற்றும்படி தமக்குக் கீழ் பணிபுரியும் ஒருவரிடம் கூறினார். பாதுகாப்பு விதிகள் காரணமாக, வேலையிடத்தில் செருப்புகளுக்கு அனுமதியில்லை.
தம்மிடம் கூறப்பட்டதைப் போன்று செருப்பை நீக்கிவீட்டு, அங்கு பாதுகாப்புக் காலணியை அந்த ஊழியர் வைத்தார். அவரது இந்தச் செயல், அருகில் இருந்த கண்காணிப்புக் கருவியில் பதிவானது.
இந்நிலையில், உயிர்ச்சேதம் ஏற்பட்ட சம்பவ இடத்தில் மாற்றம் செய்ததாக வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தின்கீழ் குற்றத்தை ஒப்புக்கொண்ட 49 வயது லிம்முக்கு வியாழக்கிழமை (மார்ச் 20) $8,000 அபராதம் விதிக்கப்பட்டது.
தன் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக, லிம் அப்போது இயக்குநராக இருந்த டைனா-லாக் சிங்கப்பூர் நிறுவனத்துக்கு $200,000 அபராதம் விதிக்கப்பட்டது.
2018 நவம்பர் 22ஆம் தேதி, கொள்கலன் ஒன்றில் இருந்தவற்றைச் சரிபார்ப்பதற்காக, பைனியர் சாலை அருகே பூரோ ஸ்திரீட்டில் உள்ள அந்த நிறுவன வளாகத்தில் திரு யோங் ஹிம் ஷோங் இருந்தார்.
அப்போது அவர் செருப்பு அணிந்திருந்தார். அத்தகைய பணிக்கான நிறுவனத்தின் பாதுகாப்பு வழிகாட்டிகளுக்கு அது உட்பட்டிருக்கவில்லை.
1.2 மீட்டர் உயரமும் 0.8 மீட்டர் விட்டமும் கொண்ட ஒரு கட்டு ரப்பர் விரிப்புகள், கொள்கலனிலிருந்து கவிழ்ந்து திரு யோங்மீது விழுந்தன. தரையில் விழுந்த அவர், அவற்றுக்கு அடியில் சிக்கிக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
அந்தக் கட்டு நிலையாக அடுக்கி வைக்கப்படவில்லை எனவும் இடைவழியில் அது அனேகமாக நகர்ந்திருக்கலாம் எனவும் மனிதவள அமைச்சின் வழக்கறிஞர் முகம்மது ஃபாட்லி கூறினார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற மருத்துவ உதவியாளர்கள், திரு யோங் நிகழ்விடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

