தனது பதின்ம வயது மகனுக்கு போதைப்பொருள் உட்கொள்ள அனுமதி வழங்கிய குற்றத்தை ஆடவர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இரு பிள்ளைகளுக்குத் தந்தையான அந்த 52 வயது ஆடவர், போதைப்பொருள் உட்கொள்ள இளையருக்கு அனுமதி வழங்கியது, கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளை வைத்திருந்தது, கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளை உட்கொண்டது ஆகியவற்றின்கீழ் தன் மீது சுமத்தப்பட்ட மொத்தம் மூன்று குற்றச்சாட்டுகளை புதன்கிழமையன்று (செப்டம்பர் 25) ஒப்புக்கொண்டார்.
வரும் அக்டோபர் மாதம் நான்காம் தேதியன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்படும். தீர்ப்பளிக்கும்போது போதைப்பொருள் தொடர்பிலான மேலும் நான்கு குற்றச்சாட்டுகள் கருத்தில்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த விவகாரங்களைக் கவனிப்பதற்காக குற்றவாளியான ஆடவருக்குத் தீர்ப்பளிப்பு ஒத்திவைக்கப்பட்டது. ஆடவர் தற்போது போதைப்பொருள் மறுவாழ்வு நிலையம் ஒன்றில் இருக்கிறார்.
ஆடவர், அவரின் இரண்டு பதின்ம வயது பிள்ளைகள் ஆகியோரின் பெயர்களை வெளியிட அனுமதி வழங்கப்படவில்லை.
ஆடவர் போதைப்பொருள் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்டதால் கடந்த மே மாதம் ஆறாம் தேதியன்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் அவரின் வீட்டுக்குச் சென்றதாக அரசுத்தரப்பு இணை வழக்கறிஞர் லிம் லி டிங் தெரிவித்தார். வீட்டின் வரவேற்பறை, மகனின் படுக்கையறை ஆகியவற்றில் அதிகாரிகள் பல போதைப்பொருள் சம்பந்தப்பட்ட கருவிகள், போதைப்பொருள்கள் ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர்.
வீட்டில் காணப்பட்டவற்றில் 0.25 கிராம் எடைகொண்ட மெத் அல்லது ஐஸ் என்றழைக்கப்படும் போதைப்பொருளும் அடங்கும். அந்த போதைப்பொருள், சிங்கப்பூரின் போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் ‘A’ பிரிவைச் சேர்ந்த கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள் வகையாகும்.
குற்றவாளியான ஆடவர், கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்திலிருந்து அடையாளம் காணப்படாத நபர் ஒருவரிடமிருந்து ஐஸ் போதைப்பொருளை வாங்கியது அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்தது. ஒவ்வொரு 0.5 கிராம் ஐஸ்ஸையும் ஆடவர் 50 வெள்ளிக்கு வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதிக்கும் மே மாதம் ஆறாம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆடவரின் மகன், அவரிடம் ஐஸ் போதைப்பொருளைக் கேட்டிருக்கிறார். தனது மகன் ஐஸ்ஸை வாங்கி உட்கொண்டதை ஆடவர் சென்ற ஆண்டிறுதியில் உணர்ந்திருக்கிறார்.
ஆடவர் தன்னிடம் இருந்த ஐஸ்ஸை மகனிடம் தந்ததாக அரசுத்தரப்பு இணை வழக்கறிஞர் லிம் குறிப்பிட்டார். குற்றவாளியான ஆடவருக்கு ஆறிலிருந்து ஏழு ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.