லிட்டில் இந்தியாவில் பக் வா (bak kwa) உணவுகளை விற்கும் கடை ஒன்றில் தீப்பிடித்தது.
செஞ்சூரி பக்வா (Century Bakkwa) என்னும் கடையில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 15) காலை அச்சம்பவம் ஏற்பட்டது.
தீச்சம்பவம் குறித்து காலை 11.40 மணிவாக்கில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகவும் அதன் பின்னர் அங்கு விரைந்ததாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையினர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர்.
30 டன்லப் ஸ்திரீட்டில் செஞ்சூரி பக்வா கடை உள்ளது. கடையின் கீழ்த்தளத்தில் உள்ள சமையல் அறையில் தீ ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தீயை, தண்ணீர்க்குழாய்களைப் பயன்படுத்தி அதிகாரிகள் அணைத்தனர்.
சம்பவத்தில் ஒருவருக்கு மூச்சுத் திணறலும் மற்றொருவருக்குச் சிறிய காயமும் ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனை செல்ல மறுத்துவிட்டார்கள்.
தீச்சம்பவத்தின் போது அந்தக் கடையில் 500 கிலோகிராம் அடுப்புக்கரி இருந்ததாகவும் மூன்று ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்ததாகவும் அதன் உரிமையாளர் தெரிவித்தார்.
சீனப் புத்தாண்டுக்கு இன்னும் சில நாள்களே இருக்கும் நேரத்தில் தீச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. சீனர்கள் பக் வா உணவுகளை விரும்பி உண்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தீச்சம்பவத்தால் 400 பேர் வழங்கிய உணவு முன்பதிவுகள் தற்போது கேள்விக்குறியாக உள்ளது. அதன் மதிப்பு 100,000 வெள்ளி எனக் கடையின் உரிமையாளர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வாடிக்கையாளர்களுக்கு உணவு முன்பதிவுக்கான தொகையைத் திருப்பித் தரத் தயார் என்றும் கடையின் உரிமையாளர் தெரிவித்தார்.
விசாரணை தொடர்கிறது.

