தெம்பனிசில் உள்ள வீவக புளோக்கின் வெற்றுத் தளத்தில் இருந்த சேமிப்புக் கிடங்கு தீப்பற்றி எரிந்தது.
வாட்ஸ்அப் செயலியில் பரவிய காணொளி ஒன்று, 16 மாடி உயர புளோக்கின் கூரை வரை கரும்புகை மேல் நோக்கிச் சென்றதைக் காண முடிந்தது.
மார்ச் 12ஆம் தேதி தெம்பனிஸ் ஸ்திரீட் 64, புளோக் 664சி-யில் தீச்சம்பவம் நிகழ்ந்தது.
கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் தீ மூண்டதற்கான காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
மாலை 6.00 மணியளவில் உதவி கேட்டு அழைப்பு வந்ததாகக் கூறிய சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, இரண்டு நீர் பாய்ச்சும் சாதனங்களைக் கொண்டு தீயை அணைத்ததாகத் தெரிவித்தது.
இச்சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை.
தீ விபத்து நிகழ்ந்ததற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க விசாரணை தொடங்கியிருக்கிறது.