துவாஸ் வட்டாரத்தில் உள்ள கிடங்கு ஒன்றில் இன்று காலை (மே 22) தீ மூண்டது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
4 துவாஸ் அவென்யூ 18இல் தீ மூண்டது குறித்து காலை 10 மணியளவில் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டது.
5 மீட்டருக்கு 5 மீட்டர் பரப்பளவு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த கழிவுப் பொருள்களில் தீப் பற்றியது.
இரண்டு கருவிகளிலிருந்து தண்ணீர்ப் பீய்ச்சியடிக்கப்பட்டதோடு ஆளில்லா தீயணைப்பு இயந்திரம் மூலம் தீ அணைக்கப்பட்டது.
தீக்கான காரணம் விசாரிக்கப்படுகிறது.
மே மாதத்தில் தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள இரண்டாவது தீச் சம்பவம் இது.
மே 9ஆம் தேதி தெம்பனிஸ் வட்டாரத்தின் தொழிற்சாலையில் தீ மூண்டது. கட்டடம் ஒன்றில் இருந்த துணிமணிப் பொருள்களில் தீ பற்றிக்கொண்டது.
கடந்த மாதத் தொடக்கத்தில் பைனியரில் உள்ள கிடங்கு ஒன்றில் தீ ஏற்பட்டது.
பிப்ரவரி 13ஆம் தேதி சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை வெளியிட்ட வருடாந்திர அறிக்கையின்படி 2023க்கும் 2024க்கும் இடைப்பட்ட காலத்தில் தீச்சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை 1,954லிருந்து 1,990க்கு உயர்ந்ததைக் காட்டியது.

