நெருக்கடிகளைச் சமாளிக்கும் தயார்நிலையை மேலும் வலுவாக்க, சிங்கப்பூர் அதன் முழுமைத் தற்காப்புப் பயிற்சியை முதல் முறையாக தீவு முழுவதும் வரும் பிப்ரவரி மாதத்தில் நடத்தவுள்ளது.
முழுமைத் தற்காப்பு அதன் 40வது ஆண்டு நிறைவை 2024ல் அனுசரிப்பதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் பல்வேறு நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.
சிங்கப்பூர் மீது பிப்ரவரி 15 முதல் பிப்ரவரி 29 வரை தாக்குதல் ஒன்று நடத்தப்படுவதுபோல ‘எக்சசைஸ் எஸ்ஜி ரெடி’ பாவனைப் பயிற்சி மேற்கொள்ளப்படும்.
இணையத் தாக்குதல்கள், போலித் தகவல்களைப் பரப்பும் இயக்கங்கள், ஆளில்லா வானூர்திகள் என பாதுகாப்புக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வெவ்வேறு தரப்புகளைக் குறிவைத்து விவரம் அறியப்படாத ஒரு நபர் தாக்குதல் மேற்கொள்வதாக இந்தப் பாவனைப் பயிற்சி அமைந்திடும்.
இந்தத் தாக்குதல்களால் சில பள்ளிகளில் பிப்ரவரி 15, 16 தேதிகளில் மின்சாரம், தண்ணீர் அல்லது உணவு விநியோகத்துக்கு தடங்கல் ஏற்படும்.
அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் அவசரகால உணவுப் பொருள்களும் தண்ணீரும் வழங்கப்படும்.
பாவனை முறையில் இவ்வாறு தடங்கல் ஏற்படும் பயிற்சிகளை சமூக வளாகங்களும் அரசாங்கக் கட்டடங்களும் இருவார காலத்தில் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
“சிங்கப்பூரர்களின் தயார்நிலை, மீள்திறன், ஒற்றுமை ஆகியவற்றை நெருக்கடி காலத்தின்போது மெருகேற்ற இந்தப் பயிற்சி நடத்தப்படுகிறது,” என்று ஜனவரி 22ஆம் தேதியன்று முழுமைத் தற்காப்பு 40வது ஆண்டு நிறைவு நிகழ்ச்சிகளின் துவக்க விழாவில் பங்கேற்ற பிரிகேடியர்-ஜெனரல் கெல்வின் ஃபான் தெரிவித்தார்.
கல்வி, சமூக, வர்த்தக, அரசாங்கக் கட்டடங்கள் என சுமார் 500 தரப்புகள் இந்தப் பாவனைப் பயிற்சியில் பங்கேற்க உள்ளன.