சிங்கப்பூர் காற்பந்து சங்கத்திற்குத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள திரு ஃபாரஸ்ட் லி இளையர்கள்மீது அதிகக் கவனம் செலுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
திரு லி, 2029ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்வரை அப்பொறுப்பில் இருப்பார்.
தற்போது புதிதாக நிர்வாகக் குழுவை அறிவித்துள்ளது காற்பந்துச் சங்கம்.
அதில் தெம்பனிஸ் ரோவர்ஸ் காற்பந்து அணியின் டெஸ்மண்ட் ஓங், சிங்கப்பூர் காற்பந்து அணித் தலைவர் ஹாரிஸ் ஹரூன் உள்ளிட்டவர்களும் உள்ளனர்.
சிங்கப்பூரில் அடித்தள அளவிலும் தொழில்முறை அளவிலும் காற்பந்தை அடுத்தகட்டத்திற்கு முன்னேற்றிச் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று திரு லி தெரிவித்தார்.
“அதற்காகச் சிறந்த கட்டமைப்பு, இளம் வீரர்கள் திறன் மேம்பாடு, பங்காளித்துவம், போட்டித்தன்மை, சிறந்த நிர்வாகம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துவோம்,” என்றார் அவர்.
“மாற்றத்தை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும், சில திட்டங்கள் வெற்றி தரும் சில தோல்வியைத் தரும். ஆனால் தொடர்ந்து முன்னேற வேண்டும்,” என்று திரு லி குறிப்பிட்டார்.
தற்போது தலைவராக உள்ள திரு லி, ஒரு பெரும் பணக்காரர். அவரின் சொத்து மதிப்பு 11.3 பில்லியன் வெள்ளி. அவர் சீ (SEA) தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவராவார்.