வெளிநாடுகளைச் சேர்ந்த 241 ஓட்டுநர்கள் செலுத்தாதிருந்த அபராதத் தொகை பெறப்பட்டுள்ளது.
இம்மாதம் ஆறாம் தேதியிலிருந்து எட்டாம் தேதிவரை நிலவழிச் சோதனைச்சாவடிகளில் வெளிநாட்டு ஓட்டுநர்களிடமிருந்து மொத்தமாக 619,000 வெள்ளிக்கும் அதிகமான நிலுவை அபராதத் தொகை பெறப்பட்டது.
அபராதம் செலுத்தாதிருந்த ஓட்டுநர்கள் சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது நிறுத்தப்பட்டனர். மிச்சம் வைத்த அபராதத் தொகையைச் செலுத்தவேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டதாக ஆறு சிங்கப்பூர் அரசாங்க அமைப்புகள் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) கூட்டறிக்கையில் தெரிவித்தன.
சம்பந்தப்பட்ட ஓட்டுநர்கள் வாகன அல்லது போக்குவரத்துக் குற்றங்களைப் புரிந்தவர்கள்.
இந்தச் சோதனை நடவடிக்கையைப் போக்குவரத்துக் காவல்துறை வழிநடத்தியது. குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக), நிலப் போக்குவரத்து ஆணையம், தேசிய சுற்றுப்புற வாரியம், நகர மறுசீரமைப்பு ஆணையம் ஆகியவற்றின் அதிகாரிகளும் நடவடிக்கையில் போக்குவரத்துக் காவல்துறைக்கு ஆதரவளித்தனர்.
குற்றம் புரிந்துவிட்டு அவற்றுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தைச் செலுத்தாத வாகன ஓட்டிகள் மீது அதிகாரிகள் அடிக்கடி நடவடிக்கை எடுத்து வருவதாக அந்த அமைப்புகள் தெரிவித்தன. போக்குவரத்து, வாகனத்தை நிறுத்திவைத்தல், வாகன நச்சுக்காற்று வெளியேற்றம் போன்ற குற்றங்களுக்காக அபராதம் செலுத்தாத வெளிநாட்டு ஓட்டுநர்கள் சிங்கப்பூர் வருவதற்குத் தடை விதிக்கப்படலாம் என்று அவை குறிப்பிட்டன.