புக்கிட் தீமா வட்டாரத்தில் உள்ள இரட்சண்ய சேனை (The Salvation Army) வளாகச் சுவரிலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்கள்மீதும் கிறுக்கல்கள் காணப்பட்ட சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்டுள்ள 43 வயது பெண்மீது சனிக்கிழமை (டிசம்பர் 27) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் தினத்தன்று கைது செய்யப்பட்ட சீன-ஆஸ்திரேலியரான அந்தப் பெண், எண் 500 அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் அமைந்துள்ள இரட்சண்ய சேனை வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வேன்கள், மற்றும் அவ்வளாகத்தின் சுவர்களில் கிறுக்கல்கள் காணப்பட்டது தொடர்பிலான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
தெளிக்கக்கூடிய வகையிலான சிவப்பு நிறச் சாயத்தைக் கொண்டு வளாகச் சுவரிலும் அங்கு நிறுத்தப்பட்ட வேன்கள் உள்ளிட்டவற்றிலும் கிறுக்கப்பட்டிருந்தது.
கிறுக்கப்பட்ட சொற்கள் சமய உணர்வுகளைப் புண்படுத்தக்கூடியவை என்று கூறிய சிங்கப்பூர் இரட்சண்ய சேனை, அந்தச் சொற்களை வெளியிட மறுத்துவிட்டது நினைவுகூரத்தக்கது.

