டிஎஸ்ஒ தேசிய ஆய்வுக்கூடங்களின் உதவி மேலாளராகப் பணிபுரிந்த போ பெங் சான், ஆறு பேரிடம் லஞ்சம் பெற்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
2013ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் அக்குற்றத்தைப் புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர்மீது 15 குற்றச்சாட்டுகள் திங்கட்கிழமையன்று (மார்ச் 23) சுமத்தப்பட்டன.
ஊழல் தொடர்பான ஆறு குற்றச்சாட்டுகளும் ஊழல், போதைப்பொருள், கடத்தல் உள்ளிட்ட இதர கடும் குற்றங்கள் (ஆதாயங்களைப் பறிமுதல் செய்தல்) சட்டத்தின்கீழ் ஐந்து குற்றச்சாட்டுகளும், மற்றும் குற்ற நடவடிக்கைகளின் பலனாகக் கிடைத்த பொருள்களை மாற்றியதற்காக நான்கு குற்றச்சாட்டுகளும் அவற்றில் அடங்கும்.
குறைந்தபட்சம் $230,000 ரொக்கப்பணம், ஒரு சியோமி (Xiaomi) திறன்பேசி, லெனோவா (Lenovo) மடிக்கணினி ஆகியவற்றை லஞ்சமாக போ பெற்றிருக்கலாம் எனச் சந்தேகிப்பதாக ஊழல் புலனாய்வுப் பிரிவு கூறுகிறது.
அதுமட்டுமன்றி, அவரது வீட்டுக் கதவை இலவசமாகப் பழுதுபார்த்து, வர்ணம் பூசுவது போன்ற சலுகைகளையும் அவர் பெற்றதாகக் கூறப்படுகிறது.
மேலும், $207,700 தொகையைத் தனது மனைவியின் வங்கிக் கணக்குகளில் வரவு வைத்ததாகவும் மேலும் $7,500 ரொக்கத்தை வெளிநாட்டு நாணயமாக மாற்றியதாகவும் அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் 22ஆம் தேதி, போவின் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

