சிறப்புத் தேவையுடைய ஆறு வயது சிறுவனின் தலையில் மீண்டும் மீண்டும் பேனாவால் குத்திய முன்னாள் ஆரம்பகால தலையீட்டு ஆசிரியருக்கு திங்கட்கிழமை (ஜூன் 22) ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
காரணம் ஏதுமின்றி அவர் அவ்வாறு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி, பிள்ளைப் பராமரிப்பு நிலையம் ஒன்றில் முன்பு ஆரம்பகாலத் தலையீட்டு ஆசிரியராகப் பணியாற்றிவந்தார்.
குற்றவாளியான 45 வயது மாது, சிறுவனைத் துன்புறுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டார். பாதிக்கப்பட்ட சிறுவன் பல காயங்களுக்கு ஆளானார்.
துன்புறுத்தலுக்குப் பிறகு அவர் பல வாரங்களுக்கு மனத்தளவில் பாதிக்கப்பட்டதாகவும் சம்பவத்துக்குப் பிறகு அவர் மேலும் பிறரைச் சார்ந்திருக்கும் சூழல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுவனின் அடையாளத்தைப் பாதுகாக்க சம்பந்தப்பட்ட மாதின் பெயரை வெளியிட அனுமதி கிடையாது. அதன்படி சம்பந்தப்பட்ட பிள்ளைப் பாதுகாப்பு நிலையத்தின் பெயரையும் வெளியிட முடியாது.
பாதிக்கப்பட்ட சிறுவன், தொடர்புத்திறன் குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஆளானவர். சம்பவம் நிகழ்ந்தபோது ஒருநேரத்தில் ஒரு வார்த்தையை மட்டுமே பேசக்கூடிய நிலையில் அவர் இருந்தார்.
இச்சம்பவம் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி பிற்பகல் மூன்று மணியளவில் நிகழ்ந்தது.

