தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவுப் (ஏஐ) பயிற்சித் திட்டங்களில் பங்கேற்கும் சிங்கப்பூரர்கள் ‘பிரீமியம்’ செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை இலவசமாகப் பெறலாம்.
இந்தக் கருவிகளை 6 மாதங்களுக்கு இலவசமாக அணுகலாம் என்று வியாழக்கிழமை (பிப்ரவரி 12) தனது வரவுசெலவுத் திட்ட உரையில் பிரதமர் லாரன்ஸ் வோங் குறிப்பிட்டார்.
பெரும்பாலான அடிப்படை ‘ஏஐ’ கருவிகள் இலவசமாக இருந்தாலும், மேம்பட்ட சிலவற்றை அணுக கட்டணச் சந்தா தேவைப்படுகிறது.
‘பிரீமியம் ஏஐ’ கருவிகளை இலவசமாகப் பெறுவதால் சிங்கப்பூரர்கள் தாங்கள் கற்றுக்கொண்டதைப் பயிற்சி செய்து, பரிசோதித்து சரிவர பயன்படுத்தலாம் என்றார் திரு வோங்.
மறுவடிவமைப்பு காணும் ‘ஸ்கில்ஸ் ஃபியூச்சர்’ இணையத்தளம்
சிங்கப்பூர் ஊழியர்கள் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பயிற்சிகளை அணுக ஏதுவாக, ‘ஸ்கில்ஸ் ஃபியூச்சர்’ இணையத்தளம் மறுவடிவமைப்பு காண்கிறது.
செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டைப் பரவலாக்க கற்றல், பயிற்சி, உரிய ஆதரவு ஆகியவை அவசியம் என்ற பிரதமர் வோங், இந்த மறுவடிவமைப்பு, ஊழியர்களின் தேவை, திறன் நிலைகளைப் பொறுத்து பயிற்சிகளைத் தேர்ந்தெடுக்க உதவுமென்றும் சொன்னார்.
விரிவடையும் தொழில்நுட்பத்துறை திறன்பயிற்சித் திட்டம் (TeSA)
ஊழியரணியின் செயற்கை நுண்ணறிவுத் திறன்களை அதிகரிக்க ஏதுவாக, தொழில்நுட்பம் சாராத துறைகளுக்கும் பல்வேறு துறை சார்ந்த தொழில்களுக்கும் (Cross-sectoral Occupations) தொழில்நுட்பத்துறை திறன்பயிற்சித் திட்டம் (TeSA) விரிவாக்கம் காண உள்ளது.
தற்போது, தொழில்நுட்பத்துறைக்கு மாறுவதற்கு இந்தப் பணியிடைக்கால மேம்பாட்டுக்கான தொழில்நுட்பத்துறை திறன்பயிற்சித் திட்டம் உதவுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்த விரிவடைந்த திட்டத்தின்கீழ் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் பல்வேறு தொழில்முறை அமைப்புகளுடன் இணைந்து உரிய கட்டமைப்புகளை உருவாக்கும்.
கணக்கியல், சட்டத் துறைகளில் தொடங்கும் இந்த விரிவாக்கம், கட்டம் கட்டமாகப் பிற துறைகளுக்கும் விரிவடையும்.

