முக்கிய வட்டாரங்களில் உள்ள கடைத்தொகுதிகளில் மூன்று சில்லறை வணிகங்களுக்கு ஓராண்டு காலம்வரை வாடகையைத் தள்ளுபடிசெய்வது, புத்தாக்க அம்சங்களை அறிமுகப்படுத்த உதவ நிதி ஆதரவு அளிப்பது ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சிங்கப்பூரின் சில்லறை வணிகத் துறைக்கு புத்துயிரூட்டும் நோக்கில் நடத்தப்படும் போட்டியின் அங்கமாக இந்நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
‘ரிட்டெயில் மேவரிக் சேலஞ்ச்’ (Retail Maverick Challenge) எனும் இப்போட்டியை என்டர்பிரைஸ் எஸ்ஜி அமைப்பும் கேப்பிட்டாலேண்ட் இன்வெஸ்ட்மென்ட் (சிஎல்ஐ) சொத்து நிர்வாகக் குழுமமும் புதன்கிழமை (ஜூன் 18) தொடங்கிவைத்தன.
கடை அமைப்பதன் தொடர்பில் புத்தாக்கம் வாய்ந்த ஆகப் புதுமையான திட்டங்களைக் கைவசம் வைத்திருக்கும் உள்ளூர் சில்லறை வணிக நிறுவனங்களைக் குறிவைத்து இப்போட்டி நடத்தப்படுகிறது.
பயனீட்டாளர்களை ஆழமாக ஈடுபடுத்தும் புத்தாக்க முயற்சிகளை மேற்கொண்டு, பயனீட்டார்களின் தேவைகள் நிறைவேற்றப்படுவதன் அடிப்படையில், அனுகூலம் வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று என்டர்பிரைஸ்எஸ்ஜி, சிஎல்ஐ வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவித்தன.
பரிந்துரைகள், கட்டுப்படியான விலையில் ஆக்கபூர்வமான செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தக்கூடிய, இடத்தையும் மனிதவளத்தையும் தொழில்நுட்பம் வாயிலாக முடிந்தவரை சாதகமாக உபயோகித்துக்கொள்ள வகைசெய்பவையாக இருக்கவேண்டும்.
போட்டியின் வெற்றியாளர்களுக்கு ஓராண்டுவரை கேப்பிட்டாலேண்ட் கடைத்தொகுதிகள் ஒன்றில் 371 சதுர மீட்டர் வரையிலான சில்லறை விற்பனைப் பகுதி வழங்கப்படும். அப்பகுதியில் வெற்றியாளர்கள் தங்கள் புதுவகையான சில்லறை வணிகத் திட்டத்தைச் செயல்படுத்தலாம்.
பிளாஸா சிங்கப்பூரா, ஃபூனான், சிகியூ@கிளார்க் கீ உள்ளிட்டவை கேப்பிட்டாலேண்ட் குழுமத்தின் கடைத்தொகுதிகளில் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
வெற்றியாளர்களுக்கு என்டர்பிரைஸ்எஸ்ஜியிடமிருந்து 50 விழுக்காடு வரை நிதி ஆதரவும் கிடைக்கும். அதிகபட்சமாக 300,000 நிதி அதரவு வழங்கப்படும். தொழில்நுட்ப, விளம்பரச் செலவு போன்றவற்றுக்கு அந்தத் தொகையைப் பயன்படுத்தலாம்.
வெற்றியாளர்கள், சிஎல்ஐயின் விளம்பரத் தளங்களிலிருந்து விளம்பர ஆதரவும் பெறுவர். மேலும், என்டர்பிரைஸ்எஸ்ஜி, சிஎல்ஐயின் தொழில்துறைப் பங்காளிகளுடனும் வல்லுநர்களுடனும் ஒத்துழைக்கும் வாய்ப்புக் கிட்டும்.
சிங்கப்பூரில் சில்லறை வணிகச் சூழல் சவாலாக இருந்துவரும் நிலையில் இப்போட்டி நடத்தப்படுவதாகப் போட்டியின் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர். அதிகரிக்கும் வணிகச் செலவு, பொருள் வாங்குவதில் வாடிக்கையாளர்களிடையே மாறிவரும் போக்கு ஆகிய சவால்களை உள்ளூர் சில்லறை வணிகம் எதிர்நோக்குவதாக அவர்கள் கூறினர்.