பாரம்பரிய சீன மருத்துவச் சேவைகளை இலவசமாக வழங்கும் புதிய மருந்தகம் ஒன்று பொங்கோலில் ஞாயிற்றுக்கிழமை (மே 26) அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
புளோக் 176A எட்ஜ்ஃபீல்ட் பிளேன்சில் அமைந்துள்ள சியூ டெக் மருத்துவக் கழகம் (பொங்கோல் கிளை), ஆலோசனை, மருந்தகச் சேவைகள், குத்தூசி மருத்துவம், ‘ட்யூனா’ உடற்பிடிப்பு சிகிச்சை போன்ற சேவைகளை வழங்குகிறது.
மார்ச் மாதம் முதல் இயங்கிவரும் இந்த மருந்தகத்தில் இரண்டு மருத்துவர்கள் உள்ளனர்.
புக்கிட் தீமா சியூ டெக் ஷான் டோங் கழகம் நிர்வகிக்கும் அறக்கொடை அமைப்பான சியூ டெக் மருத்துவக் கழகத்தால் நடத்தப்படும் மூன்றாவது இலவசப் பாரம்பரிய சீன மருத்துவச் சேவை மருந்தகம் இது.
இதர இரண்டு மருந்தகங்களும் ஜூரோங் ஈஸ்ட்டிலும் கிளமெண்டியிலும் உள்ளன. இந்த மூன்று மருந்தகங்களும் தங்களது செயல்பாட்டை நீடிக்க முற்றிலும் நன்கொடைகளைச் சார்ந்துள்ளன.
பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் டியோ சீ ஹியன்னும் இயோ வான் லிங்கும், பொங்கோல் கிளையின் திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய மூத்த அமைச்சர் டியோ, குடியிருப்பாளர்கள் ஆரோக்கியமாகவும் உடற்தகுதியுடனும் இருக்க உதவுவதில் பாரம்பரிய சீன மருத்துவம் முக்கியப் பங்காற்றுவதாகக் கூறினார்.
“குடியிருப்பாளர்கள் பலரும் மகிழ்ச்சிகரமான, ஆரோக்கியமான வாழ்வை வாழ விரும்புகின்றனர். உடலிலும் சுற்றுப்புறத்திலும் நல்ல சமநிலையை எட்ட அவர்கள் விரும்புகின்றனர். அதை அடைய பாரம்பரிய சீன மருத்துவ உத்திகள் உதவுகின்றன,” என்று அவர் சொன்னார்.

