போதைப்பொருள் சார்ந்த குற்றங்களுக்காகத் தலைமறைவாக இருந்த 48 வயது சிங்கப்பூரர் ஒருவர், கடந்த 2022 ஏப்ரலில் துவாஸ் சோதனைச்சாவடியில் பிடிபட்டார்.
துவாஸ் இரண்டாம் பாலம் வழியாக மலேசிய அதிகாரிகள் அந்த ஆடவரை விரட்டியபோது, அவர் ஓட்டி வந்த கார் துவாஸ் சோதனைச்சாவடியில் மோதி விபத்துக்குள்ளானது. பின்னர் அவர் தமது காரைப் பின்னோக்கிச் செலுத்தி, குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணைய அதிகாரி ஒருவரைக் காயப்படுத்தினார்.
டியோ தியம் லெங் என்ற அந்த ஆடவர் தன்மீதான எட்டுக் குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 5) அவருக்கு ஆறாண்டு எட்டு மாதச் சிறையும் மூன்று பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்பட்டன.
சிறையிலிருந்து வெளியானபின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு டியோ எந்தவொரு வாகனத்திற்கான ஓட்டுநர் உரிமத்தையும் வைத்திருக்கவோ பெறவோ முடியாது.
கடந்த 2017 நவம்பர் மாதம் காரின் பின்பகுதியில் மறைந்தபடி டியோ சிங்கப்பூரைவிட்டுத் தப்பிச் சென்றார். அப்போது, போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் அவர் ஒரு குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.