நிலையற்ற வர்த்தகச் சூழல், பெரிய அளவில் மாறிவரும் நாடுகளுக்கு இடையிலான அரசியல் நிலவரம், சீரற்று இருக்கும் சந்தைகள் ஆகியவற்றுக்கு மத்தியிலும் ஜிஐசி அமைப்பு கையாளும் முதலீட்டுத் திட்டங்கள் நிலையாக இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிஐசி ஆண்டுதோறும் வெளியிட்டுவரும் அறிக்கையில் இத்தகவல் தெரியவந்துள்ளது. அந்த அறிக்கை வெள்ளிக்கிழமை (ஜூலை 25) வெளியிடப்பட்டது.
இவ்வாண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரையிலான 20 ஆண்டு காலத்தில் ஜிஐசி முதலீடுகளின் மதிப்பு ஆண்டுதோறும் சராசரி 3.8 விழுக்காடு கூடியிருக்கிறது. இவ்விகிதம், ஆண்டு அடிப்படையில் 0.1 விழுக்காடு குறைந்துள்ளது.
இந்தப் புள்ளிவிவரம் பணவீக்கத்தைக் கருத்தில்கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது. இது, 20 ஆண்டுகாலத்தில் உலகப் பணவீக்க விகிதத்தை மிஞ்சியது.
பணவீக்கம் கருத்தில்கொள்ளப்படாமல் பார்த்தால் அதே 20 ஆண்டு காலத்தில் ஜிஐசியின் முதலீட்டு மதிப்பு 5.7 விழுக்காடு கூடியுள்ளது.
20 ஆண்டு காலத்துக்கான புள்ளி விவரங்களைத் தான் ஜிஐசி அளவுகோலாகப் பயன்படுத்தி வருகிறது. உலகளாவியப் பணவீக்க விகிதத்தையும் தாண்டி நீண்டகாலத்தில் முதலீட்டு மதிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற ஜிஐசியின் கடப்பாட்டுக்கு அந்த அணுகுமுறை உகந்ததாக இருப்பது அதற்குக் காரணம்.

