தங்க விலை திங்கட்கிழமை (அக்டோபர் 6) மறுபடியும் வரலாறு காணாத உச்சத்தைத் தொடும் விளிம்பிற்குச் சென்றது.
அமெரிக்க அரசாங்கத் துறை தொடர்ந்து முடங்கியிருக்கும் நிலையில் தங்க விலை ஓர் அவுன்சுக்கு 4,000 டாலரைத் (5,166 வெள்ளி) தொடும் நிலைக்குச் சென்றது.
திங்கட்கிழமையன்று தங்கக் கட்டிகளின் விலை அவுன்சுக்கு 3,920.63 டாலர் வரை உயர்ந்தது. அதன் பிறகு விலை சற்று சீரானது.
அமெரிக்காவில் அரசாங்கத் துறை முடங்கியிருப்பதால் வேலை நிலவரம் தொடர்பான புள்ளிவிவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) அந்தப் புள்ளிவிவரங்கள் வெளியிடப்படவிருந்தன.
இதனால், ஏற்கெனவே நிலையற்றிருக்கும் பொருளியல் மேலும் கணிக்க முடியாமல் இருக்கிறது.
சிங்கப்பூர் நேரப்படி திங்கட்கிழமை காலை 8.45 மணி நிலவரப்படி தங்க விலை 0.5 விழுக்காடு அதிகரித்து அவுன்சுக்கு 3,905.54 டாலராகப் பதிவானது.
வேலை நிலவரம் தொடர்பான புள்ளிவிவரங்கள் இல்லாததால் அமெரிக்கப் பொருளியல் குறித்து தகவல் அறிந்துகொள்ள வர்த்தகர்கள் தனியார் அறிக்கைகளை நாடுகின்றனர். அதேவேளை, நாணயக் கொள்கை குறித்த முடிவுகளை எடுக்க அமெரிக்க மத்திய வங்கி சிரமப்பட்டு வருகிறது.