உலகப் பொருளியல் நிச்சயமற்ற சூழலில், நிறுவனங்கள் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டாலும், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கு நல்ல வேலைவாய்ப்பு நிலவுகிறது.
பட்டம் பெற்ற ஆறு மாதங்களிலேயே, பத்தில் ஒன்பது சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வேலை கிடைத்ததாகக் கருத்தாய்வு ஒன்று காட்டுகிறது.
ஆக அண்மைய 2025ஆம் ஆண்டுக்கான கூட்டு தன்னாட்சிப் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் வேலைவாய்ப்புக் கருத்தாய்வின்படி, சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு விகிதம் 91.4 விழுக்காடாகப் பதிவானது.
இதற்கிடையே, சென்ற ஆண்டு அப்பல்கலைக்கழகப் பட்டதாரிகளின் சம்பளம் 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகமாக இருந்தது. 2024ஆம் ஆண்டு வகுப்பு மாணவர்களுக்கு, சராசரி மாதச் சம்பளம் 5,057 வெள்ளியிலிருந்து 5,116 வெள்ளிக்குக் கூடியது.
2025ஆம் ஆண்டு வகுப்பிலிருந்து பட்டம்பெற்ற 2,331 மாணவர்களில் 1,710, அதாவது 73.4 விழுக்காட்டினர் கருத்தாய்வில் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகமும் ஐந்துத் தன்னாட்சிப் பல்கலைக்கழகங்களும் இணைந்து ஆண்டுதோறும் அந்தக் கருத்தாய்வை நடத்துகின்றன.
அதன் பட்டதாரிகளுக்கான தேவை அதிகமாக இருப்பதாகச் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் செய்தி அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
கடந்த காலத்தில் நடத்தப்பட்ட பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புக் கருத்தாய்வுகளின் முடிவுகளைப் போலவே நிதிக் காப்பீடு, சட்டம், கணக்கியல், தணிக்கை, தகவல் தொடர்பு ஆகிய துறைகளே வேலைவாய்ப்பு வழங்குவதில் முன்னணியில் உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் தனித்துவமான கல்வி மாதிரியின் ஒரு முக்கிய அடையாளம், அதன் கட்டாய வேலைப் பயிற்சித் திட்டமாகும்.
தனது மாணவர்களை ஊழியரணிக்குத் தயார்ப்படுத்த அந்தத் திட்டம் மிக முக்கியப் பங்காற்றியிருப்பதாகப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
முழுநேர நிரந்தர வேலைகளில் இருக்கும் பட்டதாரிகளில் 30.9 விழுக்காட்டினர் அவர்கள் வேலைப் பயிற்சி பெற்ற நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள் அல்லது பணிபுரிந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

