அரசாங்க அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் மலேசியர்கள் இருவர் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, விலை மதிப்புமிக்க பொருள்களைகளைச் சேகரிக்க மோசடிக் கும்பல்களுக்கு உதவிய சந்தேகத்தின்பேரில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து சிங்கப்பூரில் கைது செய்யப்பட்ட மலேசியர்களின் எண்ணிக்கை 19ஆகக் கூடியுள்ளது என்று காவல்துறை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) அறிக்கை மூலம் தெரிவித்தது.
அவர்களில் ஆக அண்மையில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் 27 வயது ஆண், மற்றொருவர் 34 வயதுப் பெண். அவ்விருவரும் ஒரே மோசடிக் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படுகிறது.
குற்றச்செயல்களின் மூலம் ஈட்டப்படும் லாபத்தை/ பொருள்களைப் பெறுவதற்கு மற்றொருவருக்கு உதவிய குற்றத்திற்காக, இருவர்மீதும் புதன்கிழமை (ஏப்ரல் 29) குற்றம் சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து ரொக்கம், $100,000 மதிப்பிலான தங்கக் கட்டிகளைப் பெற்றுக்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட மலேசிய ஆடவர் சிங்கப்பூருக்கு வந்தார் என்று காவல்துறைக்கு திங்கட்கிழமை (ஏப்ரல் 27) தகவல் கிடைத்தது. மோசடிக்காரர்கள் அவரை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.
அதற்குப் பிறகு திங்கட்கிழமையன்று ஒரு மலேசியப் பெண்ணையும் அதிகாரிகள் அடையாளம் கண்டனர். அப்பெண்ணும் அதே குற்றக் கும்பலுடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படுவதாகக் காவல்துறை குறிப்பிட்டது.

