வெளிப்புற நடவடிக்கைகளில் பங்கேற்குமுன் காற்றுத் தரத்தைப் பார்த்துக்கொள்ளுமாறு தேசிய சுற்றுப்புற வாரியம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தோனீசியாவின் சுமத்ராவில் தீப்பற்றி எரியும் இடங்களின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து, சுமத்ராவின் தெற்கு, மத்தியப் பகுதிகளில் மிதமானது முதல் கடுமையான புகைமூட்டம் நிலவுவதாக வாரியம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இந்நிலையில், இப்போதைய காற்றுப் போக்கைப் பார்க்கையில், சிங்கப்பூர் கடும் புகைமூட்டத்தால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படவில்லை. ஆயினும், காற்று திசைமாறி வீசினால் காற்றுத் தரக் குறியீட்டெண் (பிஎஸ்ஐ) மோசமாகக்கூடும் என்று வாரியம் எச்சரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி நிலவரப்படி, சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் பிஎஸ்ஐ 81ஆக இருந்தது. இது மிதமான நிலையைக் குறிக்கிறது.
இதனால், வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் திட்டமிடும்போது, தற்போதைய காற்றுத் தரத்தைக் காட்டும் ஒரு மணி நேர பிஎம்2.5 குறியீட்டெண்ணைப் பார்க்குமாறு பொதுமக்களை வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
www.haze.gov.sg என்ற இணையத்தளத்தில் அதனைக் காணலாம்.