வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் இலக்குடன் அதிக உணவகங்களை அதன் செயலியில் விளம்பரப்படுத்த கிராப் நிறுவனம் புதிய திட்டத்தை செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) அறிமுகப்படுத்தியது.
தஞ்சோங் பகார் சமூக மன்றத்தில் நடந்த திட்டத்தின் தொடக்க விழாவில் வர்த்தக, தொழில் மூத்த துணையமைச்சர் லோ யென் லிங் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
‘கிராப் ஃபுல் ஹவுஸ் மிஷன்’ என்ற பெயரில் அத்திட்டம் குறிப்பாக சிறிய உணவகங்களுக்கு கிராப் செயலியில் அரிய வாய்ப்பை அளிக்கும்.
“உண்மை என்னவெனில் பொதுவாக வாடிக்கையாளர்கள் கைப்பேசியில் உள்ள கிராப் போன்ற செயலியைத் திறந்தபிறகே எதை உண்ணலாம் என்ற முடிவெடுக்கின்றனர்,” என்று அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அலஜன்ட்ரோ ஒசொரியோ செய்தியாளர்களிடம் கூறினார்.
“சிங்கப்பூரை அடித்தளமாகக் கொண்ட பயனாளர்களில் 84 விழுக்காட்டினர் புதிய உணவகங்கள், கடைகள் பற்றி கிராப் செயலியைக் கொண்டுதான் அறிந்துகொள்கின்றனர். அவர்களில் 74 விழுக்காட்டினர் யாரிடம் உணவை முன்பதிவு செய்வது என்பதை முடிவு செய்யாமலே செயலியைத் திறக்கின்றனர்,” என்று அவர் விளக்கினார்.
எனவே உணவகங்களையும் கடைகளையும் கைப்பேசிகளில் இயங்கும் செயலியின் வழியாக அறிமுகப்படுத்தி, அதிக வாடிக்கையாளர்களை வர்த்தகங்கள் எட்டுவதற்கு கிராப் உதவ முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

