நன்றாகப் படித்து, சிறந்த தேர்ச்சியுடன் பட்டம் பெற்றதும் ஒரு நல்ல வேலையில் அமர்ந்துவிட்டால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்ற மனநிலை தற்காலத்தில் மாற்றமடைந்துவிட்டது.
இவ்வாண்டுக்கான இரண்டாம் காலாண்டில் நடந்த வேலையிடச் சந்தைக்கான ஆய்வில் அனுபவம் நிறைந்த பட்டதாரிகள் ஆட்குறைப்புக்கு ஆளானது பலரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
ஆட்குறைப்பு செய்வதில் நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை இது வெளிக்காட்டுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
குறைந்த கல்வித் தகுதி உள்ளோரைவிட 1000 ஊழியர்களில் 2.6 முதல் 3.1 விழுக்காடு சிங்கப்பூரைச் சேர்ந்த பட்டதாரிகள் அவ்வாறு ஆட்குறைப்பு செய்யப்பட்டனர்.
பல நிறுவனங்கள் மேற்கொண்ட மறுசீரமைப்பில் உயர் கல்வித் தேர்ச்சியடைந்தோர் ஆட்குறைப்புக்கு ஆளாகியது தெரியவந்தது என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது. எனவே அறிவு சார் துறைகளிலும் நிபுணத்துவம் நிறைந்த பணிகளிலும் பலர் 2026ஆம் ஆண்டு முதல் காலாண்டில் வேலையிழக்க நேரிட்டது.
50 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள்
அனைத்து வயதினைரையும் ஒப்பிடுகையில், 50 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களே அதிக ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டனர். உள்நாட்டின் 1,000 ஊழியர்களில் 2.8 முதல் 3.1 விழுக்காடு 50 வயதை கடந்த ஊழியர்கள் வேலைகளை இழந்தனர்.
“பாரம்பரியமாக நல்ல விதமாக படித்து பட்டம் பெற்று வேலை கிடைத்துவிடும் என்று இருந்த நிலை மாறிவிட்டது” என பட்டக் கல்வியுடன் முதுகலைப் பட்டப்படிப்பையும் முடித்து தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி அண்மையில் ஆட்குறைப்புச் செய்யப்பட்ட ஒருவர் கவலையுடன் கருத்துரைத்தார்.
“ஆட்குறைப்பு குறித்த தரவுகள் சில காலமாக ஒரே விதமாக அமைந்துள்ளன. அதன்படி, உயர்க் கல்வியுடன், தொழில் சார்ந்த கைத்திறன் உள்ளோரும் அதிக வயதானோரும் ஆட்குறைப்புக்கு கடந்த சில ஆண்டுளாக ஆளாகின்றனர்,” என்று சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் வால்டர் திரேசா தெரிவித்தார்.

