மின்கார்களுக்கென தனிப்பட்ட பதிவெண் பலகையை அறிமுகம் செய்வது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து அதிகாரிகள் கருத்துகளைத் திரட்டவிருக்கின்றனர்.
வாகனப் பதிவெண் பலகைகளை வெவ்வேறு சாயல்களில் உள்ள பச்சை நிறங்களில் வடிவமைப்பது குறித்து கருத்துகள் கேட்டறியப்படும்.
கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் உட்பட பதிவெண் பலகைகளைத் தயாரிக்கும் கார் பட்டறைகளிடமிருந்தும் மின்கார் உரிமையாளர்களிடமிருந்தும் நிலப் போக்குவரத்து ஆணையமும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் கருத்துகளைத் திரட்டவிருக்கின்றன.
தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க பச்சை நிற பதிவெண் பலகைகள் அதிகாரிகளுக்குக் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், திரட்டப்படும் கருத்துகளின் அடிப்படையில் இறுதிப் பதிவெண் பலகை வடிவமைப்பு மாறக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் கூடுதல் தகவல்கள் பகிரப்படும் என்றும் தற்போதுள்ள பதிவெண் பலகைகளை மாற்றிக்கொள்ள மின்வாகன உரிமையாளர்களுக்குப் போதுமான அவகாசம் அளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
தற்போதைக்கு மின்மோட்டார்சைக்கிள்களுக்கும் ‘ஹைபிரிட்’ மின்வாகனங்களுக்குமான பதிவெண் பலகைகளை மாற்ற எந்தத் திட்டமும் இல்லை என்று நிலப் போக்குவரத்து ஆணையமும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் கூறின.
தேர்ந்தெடுக்கப்பட்ட மின்வாகனங்கள் புதிய பதிவெண் பலகைகளுக்கு மாற தேவை இருக்காது.
தொடர்புடைய செய்திகள்
மின்வாகனங்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள பச்சை நிற பதிவெண் பலகைகள் குறித்து 2024ஆம் ஆண்டு தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
போக்குவரத்து அமைச்சராக அப்போதிருந்த திரு சீ, சாதாரண வாகனங்களின் இயந்திரப் பொறியைவிட மின்வாகனங்களின் மின்கலங்கள் மாறுபட்டவை என்பதால் தீ விபத்தின்போது அவற்றைக் கையாள மாறுபட்ட வழிகள் தேவைப்படுகின்றன என்றார்.
சாதாரண வாகனங்களைவிட மின்வாகனங்களின் தீ கடுமையாக எரியக்கூடும் என்றார் அவர்.

