தொழில்நுட்பக் கல்விக் கழக மேற்கு கல்லூரியில் மூன்று பதின்ம வயது இளையர்கள் துன்புறுத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மார்ச் 12ஆம் தேதி மூன்று இளையர்களும் மற்றொரு இளையரைத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் மூவரை அதிகாரிகள் தேடிவருவதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துன்புறுத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சட்டவிரோதக் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
மார்ச் 12ஆம் தேதி அந்த இளையர்கள் தொழில்நுட்பக் கல்விக் கழக மேற்கு கல்லூரியில் உள்ள மாடிப்பகுதி ஒன்றின் அருகே மற்றொரு இளையரைத் தாக்கியதாக நம்பப்படுகிறது.
இச்சம்பவம் குறித்த காணொளி ஒன்றும் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றது. அதில் இரு இளையர்கள் ஓர் இளையரை அடிப்பது பதிவாகியிருந்தது. இளையர் அடிவாங்குவதை மூன்று பேர் அருகிலிருந்து ரசிப்பதும் அதில் காணப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக மூன்று பேர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருவருக்கு 16 வயது என்றும் மற்றொருவருக்கு 18 வயது என்று தெரிவிக்கப்பட்டது.
வழக்கு விசாரணை ஏப்ரல் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

