சிங்கப்பூரெங்கும் வியாழக்கிழமை (மார்ச் 20) இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
காலை 8.45 மணிக்கும் 10.15 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் சிங்கப்பூரில் உள்ள பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை எதிர்பார்க்கப்படுவதாக சிங்கப்பூர் வானிலை மையம் கூறியது.
சில இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக பொதுப் பயனீட்டுக் கழகம் எச்சரிக்கை விடுத்தது.
தெம்பனிஸ் விரைவுச்சாலையை அடுத்து, சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று காலை 7.40 மணி அளவில் கழகம் எச்சரித்தது.
அடுத்த ஒரு மணி நேரத்துக்கு அவ்விடத்தைத் தவிர்க்கும்படி அது எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக, அது திடீர் வெள்ள எச்சரிக்கையை விடுத்துள்ளது.
புதன்கிழமை (மார்ச் 19) காலை, வடகிழக்கு திசையிலிருந்து திடீரென்று சிங்கப்பூர் நோக்கி விரைந்த குளிர் காற்று காரணமாகத் தொடர் கனமழை பெய்து வருகிறது.
புதன்கிழமை நண்பகல் நேரத்தில் வெப்பநிலை 23.6 டிகிரி செல்சியசாகக் குறைந்தது.
தொடர்புடைய செய்திகள்
மார்ச் 19லிருந்து 21ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்திருந்தது.
வெப்பநிலை 22 டிகிரி செல்சியசாகக் குறையக்கூடும் என்றும் அது கூறியிருந்தது.
வியாழக்கிழமை (மார்ச் 20) காலை மணி 6.57 நிலவரப்படி, நியூட்டன் வட்டாரத்தில் வெப்பநிலை 22.2 டிகிரி செல்சியசாகக் குறைந்தது.
2025ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் ஆகக் குறைவான வெப்பநிலை 21.6 டிகிரி செல்சியஸ்.
இதுவே இவ்வாண்டில் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள ஆகக் குறைவான வெப்பநிலை.
இது ஜனவரி 11ஆம் தேதியன்று நியூட்டனில் பதிவானது.