காஸா போர் மூண்டு ஓராண்டு ஆன நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருள்களை அனுப்புவதில் சிங்கப்பூர் அறப்பணி அமைப்புகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.
காஸாவிலிருந்து ஏறக்குறைய 8,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிங்கப்பூர், அந்தச் சிறிய கடலோரப் பகுதி மக்களுக்கு தொடர்ந்து உதவிப் பொருள்களை அனுப்பி வருகிறது.
“இன்னமும் அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். தற்போது லெபனானிலும் பிரச்சினை வெடித்துள்ளது,” என்று ‘சோலாரிஸ் ஸ்ட்ராடெஜிஸ் சிங்கப்பூர்’ அமைப்பின் அனைத்துலக விவகாரங்களுக்கான மூத்த நிபுணர் டாக்டர் முஸ்தபா இஸ்ஸுதின் கூறினார்.
அக்டோபர் 7ஆம் தேதியிலிருந்து இருந்ததைவிட தற்போது பிரச்சினை மேலும் பெரிதாகலாம் என்றார்.
அக்டோபர் 7 திங்கட்கிழமை அன்று போர் மூண்டு ஓராண்டு நிறைவடைகிறது.
பாலஸ்தீன போராளி அமைப்பான ஹமாஸ் இஸ்ரேலில் புகுந்து தாக்கியதால் இஸ்ரேல் போரில் குதித்தது.
காஸாவில் 41,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் 2.3 மில்லியன் மக்கள் தொகையில் பெரும்பாலோர் மாற்று இடங்களுக்குச் சென்றுவிட்டனர். இதனால் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டு காஸா மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்.
சிங்கப்பூர் இதுவரை நான்கு முறை 17 மில்லியன் வெள்ளிக்கு (யுஎஸ்$13 மில்லியன்) மேல் மதிப்புள்ள நிவாரணப் பொருள்களை காஸாவுக்கு அனுப்பியிருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
அண்மைய ஜூலையில் சார்டின், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
போர் முடிவதற்கான அறிகுறி தென்படாத நிலையில் ரஹமாடான் லில் அலாமின் அறநிறுவனம் டிசம்பர் வரை நீடிக்கும் 3வது ஆக நீளமான நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிதி காஸாவில் உள்ள குடும்பங்களுக்கும் குழந்தைகளுக்கும் கல்வி வழங்கவும், மருந்து, சுகாதார அத்தியாவசியப் பொருள்களை விநியோகிக்கவும் பயன்படுத்தப்படும்.

