கிளமெண்டியின் சன்செட் வே பகுதியில் உள்ள 15 ஹெக்டர் பரப்பளவு இயற்கைக் காட்டு நிலம் புதிய வீடமைப்புப் திட்டத்துக்கென ஒதுக்கப்பட்டுள்ளது.
எதிர்கால வீடமைப்புக்கு அடையாளம் காணப்பட்டுள்ள மாஜு காடு, ஏறத்தாழ 23 ஹெக்டர் மொத்த அளவுடையது.
1980ஆம் ஆண்டு முதலே அப்பகுதி பொது வீடமைப்புக்கென வரைவு செய்யப்பட்டது. அந்த பசுமையான வட்டாரத்தில் சுற்றுப்புற ஆய்வை மேற்கொள்ளும்படி வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) ஆணை பிறப்பித்திருந்தது.
இந்த விவரங்களைக் கழகம் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) அறிவித்தது.
புரூக்வெல் டிரைவ், கிளமெண்டி ரோடு, சன்செட் வே ஆகிய எல்லைகளைச் சுற்றளவில் கொண்ட காட்டுப் பகுதியின் 8 ஹெக்டர் பரப்பளவு நிலம் வனவிலங்குகளுக்கும் இயற்கை வனப்புக்கும் தொடர்ந்து புகலிடம் வழங்கும் விதமாகப் பாதுகாக்கப்படும் எனவும் வீவக விளக்கம் அளித்தது.
பாதுகாக்கப்படும் இயற்கை வளங்களில் அங்குள்ள நன்னீரோடை, பல்லுயிர்ச் சூழல் நிறைந்த செடிகொடிகள் ஆகியவற்றோடு ‘ஓல்டு ஜூரோங் லைன்’ எனப்படும் பழைய ரயில் தண்டவாளம் இருந்த வழிப்பாதையும் அடங்கும். அதில் புதிதாக 4 கிலோமீட்டர் நீளமுள்ள இயற்கை நடைபாதை அமைக்கும் திட்டம் பரிசீலிக்கப்படுகிறது.
திட்ட வடிவமைப்பு முழுமையடையும் வரையில் இயற்கை ஆர்வலர்களும் அதில் பங்கேற்றனர் என்று வீவக கூறியது.
வீடமைப்புக் கட்டுமானப் பகுதியில் பாதிக்கப்படும் இயற்கை வளம் சார்ந்த மரம், செடிகொடிகள் முடிந்தவரை படிப்படியாக மாற்று இடங்களுக்குக் கொண்டு செல்லப்படும்.
பசுமை நிறைந்த, சிங்கப்பூரிலேயே வளரக்கூடிய செடிகொடிகள் உள்ளடங்கிய குடியிருப்பாக எதிர்காலத்தில் அப்பகுதி அமையும் எனவும் வீவக தெரிவித்தது.
அருகில் உள்ள கிளமெண்டி இயற்கை நடைபாதையும், பழைய ஜூரோங் ரயில் தண்டவாளப் பாதையும் மேம்படுத்தப்பட்டு வீடமைப்புத் திட்டத்தோடு இயற்கையை இணைக்கும் விதமாகக் கட்டிமுடிக்கப்படும்.

