புதிய கொவிட்-19 கிருமித் திரிபுகளைக் குறிவைத்து ஃபைசர் தயாரித்துள்ள தடுப்பூசிக்கு அனுமதி அளித்திருப்பதாக சுகாதார அறிவியல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
புதுப்பிக்கப்பட்ட கமிர்னாட்டி தடுப்பூசி, ஒமிக்ரான் XBB.1.5 கிருமித் திரிபைக் குறிவைக்கிறது. இதில் எரிஸ், BA.2.86 வகை கிருமிகளும் உள்ளடங்கும்.
சிங்கப்பூரின் கொவிட்-19 தடுப்பூசி நிபுணர் குழு, புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசியின் புள்ளிவிவரங்களைப் பரீசிலித்து வருவதாகவும், விரைவில் பரிந்துரைகளை வெளியிடும் என்றும் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் வெள்ளிக்கிழமை தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
அக்டோபர் மாதக் கடைசிக்குள் புதிய வகை தடுப்பூசி சிங்கப்பூரை வந்தடையும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தத் தடுப்பூசி, தற்போது சமூகத்தில் பரவலாகப் பரவாத ஆரம்பக் கிருமி வகையைக் குறி வைக்காது.
கிருமி உருமாறுகையில் பாதுகாப்பு நீடிப்பதைப் புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசி உறுதிசெய்யும் என்று ஆணையம் வலியுறுத்தி இருக்கிறது.
இதற்கிடையே, சிங்கப்பூரர்கள், குறிப்பாக வயதானவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று திரு ஓங் கேட்டுக்கொண்டுள்ளார்.
சிங்கப்பூரின் தடுப்பூசி விகிதம் குறைந்து வருவதால், “காலப்போக்கில் கொவிட்-19 கிருமிக்கு எதிரான நமது பாதுகாப்பும் பலவீனமடையும்,” என்றார் அவர்.
“கிருமியின் வீரியம் குறையவில்லை, நாம்தான் தடுப்பூசி மூலமும் கிருமித்தொற்றிலிருந்து குணமடைவதன்மூலமும் வலுவடைந்திருக்கிறோம்,” என்றார் திரு ஓங்.