நால்வர் ‘கரம்பிட்’ கத்தியைக் கொண்டு ஏப்ரல் 25ஆம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு பிரின்செப் ஸ்திரீட்டில் இரண்டு ஆடவர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
சண்டை குறித்துத் தங்களுக்குப் பின்னிரவு 12.40 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையினர் கூறினர்.
சம்பவ இடத்தை அடைந்தபோது அங்கே காயங்களுடன் 23, 24 வயதில் இருவர் இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.
இருவரும் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
வாக்குவாதம் மூண்டதை அடுத்து இருவரையும் அந்த நால்வர் கொண்ட குழு தாக்கியிருக்கலாம் என்று ஆரம்பகட்ட விசாரணைகள் கூறுகின்றன.
தாக்கியதாகக் கூறப்படும் நால்வரையும் அதே நாளில் அடையாளம் கண்டு கைதும் செய்தனர் காவல் அதிகாரிகள்.
நால்வரில் மூவர் மீது ஏப்ரல் 27ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டது.
ஆபத்து விளைவிக்கும் ஆயுதத்தைக் கொண்டு வேண்டுமென்றே காயம் விளைவித்ததன் தொடர்பில் முகம்மது ஃபத்துலா சைனல், 23, ஷமிருல் அஸ்வட் சைனல், 21, ஷாருல் டனிஷ் ஸைனல் அபிடின், 23 ஆகிய மூவர் மீதும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
கோ வென் ஹாவ், ஷெர் ஜுன் வெய் ஆகிய இருவரையும் அவர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ‘கரம்பிட்’ கத்தி, வளைவான கூர்நகம் போன்ற வடிவில் இருக்கும். 2019 ஆர்ச்சர்ட் டவர்ஸ் கொலையில் இந்த வகை கத்தி பயன்படுத்தப்பட்டது.