கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கும் முன்னர் குலவ்கொமா நோயால் பாதிக்கப்பட்ட ரேமண்ட் சந்திரன், தமது ஆரோக்கிய வாழ்க்கைமுறையை விட்டுக்கொடுக்கவில்லை.
32 ஆண்டுகளாக பொறியியல் நிறுவனத்தில் மூத்த நிபுணராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற திரு ரேமண்ட், பின்னர் ஏழு ஆண்டுகள் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றத்தில் பயிற்றுநராகப் பணியாற்றினார். மனைவியுடன் பேட்மிண்டன், நண்பர்களுடன் காற்பந்து என விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டவர் அவர்.
குலவ்கொமாவால் கண்பார்வை மங்கத் தொடங்கியதால் தமது ஓய்வுநேர நடவடிக்கைகளை நிறுத்தவேண்டியதாயிற்று. “பார்வை பாதிக்கப்பட்டதால் காற்பந்தை நிறுத்தவேண்டும் என்றதும் மனம் உடைந்துபோனேன்,” என்றார் சந்திரன். தம் வாழ்வின் பெரும் அங்கத்தை வகித்த விளையாட்டை நிறுத்தவேண்டும் என்றதும் கோபம், வெறுப்பு, சோகம் என மனதளவில் பல உணர்வுகள் கலந்து அவரைப் பாதித்ததாகச் சொன்னார் சந்திரன்.
மனம் தளராத சந்திரன், கண்பார்வையை மையமாகக் கொள்ளாத சில விளையாட்டுகளில் ஈடுபடலாம் என்ற நம்பிக்கையில் எண்ணிலடங்கா மற்ற வழிகளில் துடிப்புடன் இருக்க முனைந்தார். புதிய அனுபவங்களையும் வெவ்வேறு வழிகளில் மகிழ்ச்சியைப் பெற உறுதியானார்.
நோயால் பாதிக்கப்பட்டபோது அவருக்கு வயது 63. மூன்று வெவ்வேறு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட அவர், கண்களில் ரத்த அழுத்தத்தைக் குறைக்க தினந்தோறும் ஐந்து முறை கண்களுக்குச் சொட்டு மருந்து இடவேண்டும்.
கண்பார்வை மங்கிய நிலையில் இப்போது இருந்தாலும் 77 வயதான அவர், வெஸ்ட் கோஸ்ட் பகுதியில் உள்ள தமது இல்லத்திலிருந்து கிளமெண்டி விளையாட்டரங்கம் அல்லது கிளமெண்டி சென்ட்ரலுக்கு வாரம் மூன்று முறை வேகநடை மேற்கொள்கிறார். அவ்வாறே ஒவ்வொரு முறையும் 10,000 காலடிகளை எடுத்து வைக்கிறார்.
உறுதியாக இருக்கவேண்டும், திடமாக இருக்கவேண்டும், நல்லதையே நினைக்கவேண்டும், தன்னம்பிக்கை இழக்காதிருக்கவேண்டும் என்பதே அவரது தாரக மந்திரம். இவற்றையே மற்றவர்களுக்கும் கூறி ஊக்கம் தருகிறார் சந்திரன்.
சந்திரனைப் பொறுத்தமட்டில் ஒருவரின் வயது அல்லது உடல்நிலை எப்படி இருந்தாலுமே சரியான நடவடிக்கைகளையும் உடற்பயிற்சியையும் தேர்ந்தெடுப்பது சாத்தியம் என்றார். உடலைக் கட்டுடன் வைத்திருப்பதைத் தாண்டி சமூகத்தினருடன் இணைப்புடன் இருக்க ஏதுவாக இருப்பதை அவர் சுட்டினார்.
“விளையாட்டரங்கத்திற்குச் சென்றால் புதிய நண்பர்களைச் சந்தித்து அவர்களுடன் நடப்பேன். பின்னர் ஒன்றாக காப்பி அருந்தி லேசான உணவு உண்போம்,” என்ற அவர், நடைப்பயிற்சி போன்ற சாதாரண நடவடிக்கை மூலமே நட்பு வட்டத்தைப் பெருக்க முடிவதைக் குறிப்பிட்டார்.
இரண்டாண்டுகளுக்கும் முன்னர் சாஸ்கோ@வெஸ்ட்கோஸ்ட் (SASCO@WestCoast) துடிப்புமிக்க மூப்படைதல் நிலையத்தில் சேர்ந்து ஸும்பா போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார். நாற்காலியில் அமர்ந்தபடியே நடனம் போன்ற அசைவுகள் மூலம் உடலுக்குப் பயிற்சி அளிக்கும் இந்த ‘சேர் ஸும்பா’ நடவடிக்கைகள் மூத்தோருக்கும் நடமாட்டம் குன்றியவர்களுக்குமே ஏதுவானது.
சுகாதார மேம்பாட்டு மன்றம் ஏற்பாடு செய்யும் மெதுவான ஸும்பா கோல்ட் வகுப்புகளுக்குச் செல்ல அவர் வீட்டுக்கு அருகே உள்ள கட்டடத்திற்கு சனிக்கிழமைதோறும் சந்திரன் செல்கிறார்.
ஒட்டுமொத்த நலனைப் பேணுதல்
தமது இளமைப் பருவத்தில் பணி நிமித்தமாக நேரப் பற்றாக்குறை இருந்தாலும் சந்திரனின் ஆரோக்கிய வாழ்க்கைமுறைக்கு அது தடையாக இருந்ததில்லை.
பஹ்ரைன், உகாண்டா, இந்தோனீசியா போன்ற நாடுகளில் பணி நிமித்தமாகச் சென்றிருந்தபோதும் உடற்பயிற்சிக்கு ஓய்வு இல்லை. கண்கவர் இடங்களுக்குச் செல்வது, மலைகளை ஏறுவது என உடலுக்குப் பயிற்சி அளித்தே வந்தார்.
தற்போது விளையாட்டுகளில் ஈடுபடாத அவர், மதிய தூக்கத்தையும் இரவுநேர சிற்றுண்டியையும் நிறுத்திவிட்டார். இரவு 10 மணிக்கெல்லாம் தூங்கி காலை 6.30 மணிக்கு எழுந்து புது உத்வேகத்துடன் நாளைத் தொடங்குகிறார்.
இரு பிள்ளைகளுக்குத் தந்தையான சந்திரன் காலை எழுந்ததும் உடலுக்கு லேசான பயிற்சிகளைச் செய்தபின் காலை உணவு உட்கொண்டதும் 25 நிமிடம் மெதுநடை மேற்கொண்டு அக்கம்பக்க கடைகளுக்குச் சென்று மளிகைப் பொருட்கள் வாங்கிவிட்டு நண்பர்களுடன் உரையாடிவருவார்.
சரியான அளவு உணவு உட்கொள்வதை முக்கியம் என்று நம்பும் அவர், ‘ஓட்மீல்’, முழுதானிய ரொட்டி, சர்க்கரை இல்லாத காப்பி என ஆரோக்கிய முறையிலே உணவருந்துகிறார்.
தமது உடல் ஆரோக்கியத்துக்குத் தன் குடும்பமே உந்துசக்தி. அழகுபராமரிப்பு நிறுவனத்தை நடத்திவரும் அவரது 65 வயது மனைவி வாரம் மூன்று முறை வெஸ்ட் கோஸ்ட் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்கிறார். உடல்கட்டழகுப் பயிற்றுநரான அவரது 47 வயது மகன், சந்திரனின் உடற்பயிற்சி, உணவுமுறை மீது கவனம் செலுத்துகிறார்.
“ஒருநாள் நான் வயது முதிர்ந்துபோவேன் என்று தெரியும். ஆனால் துடிப்புடனே இருப்பதால் அவ்வளவு கவலை இல்லை. உடற்பயிற்சி செய்தால் கவலை குறைவாகவே இருக்கும்,” என்றார் அவர்.
ஒட்டுமொத்த நலனுக்கு உடல் ரீதியாக துடிப்புடன் இருப்பதுடன் சமூகத்துடனும் அன்புக்குரியவர்களுடனும் இணைந்திருப்பதும் நல்லது என்றார்.
சக மூத்தோருக்கு அவர் கூறுவது: “உணவுக்கும் உரையாடலுக்கும் நண்பர்களைச் சந்தித்து நம்மை துடிப்புடன் வைத்திருக்கவேண்டும்.”
துடிப்புமிக்க மூப்படைதலை அரவணைத்தல்
உடலாலும் மனதாலும் சிங்கப்பூரர்கள் ஆரோக்கியமாக இருப்பதை ஊக்குவிக்கவும் உறுதியுடன் மூப்படையவும் அமைச்சுக் குழுவின் வெற்றிகரமான மூப்படைதலுக்கான 2023 செயல்திட்டம் “நான் இளமையாக இருக்கிறேன் எஸ்ஜி’ திட்டம் மூலம் மூப்படைதலை வருணிக்கிறது.
குடிமக்கள் மூன்று கருப்பொருள்களின்கீழ் தொடர்ந்து துடிப்புடன் இருக்க இந்தச் செயல்திட்டம் ஊக்குவிக்கிறது.
- பராமரித்தல்: வருமுன் காக்கும் சுகாதாரப் பராமரிப்பு, துடிப்புமிக்க மூப்படைதல், பராமரிப்புச் சேவைகள் மூலம் உடல், மன நலனை மூத்தோர் ஆர்வத்துடன் பார்த்துக்கொள்ள ஊக்கமூட்டுதல்
- பங்களித்தல்: கலந்துறவாடும் சமூகத்தைப் பேணும் பொருட்டு மூத்தோர் தங்களின் அறிவாற்றலையும் அனுபவத்தையும் தொடர்ந்து பகிர ஊக்கமூட்டுதல்
- இணைந்திருத்தல்: அன்புக்குரியவர்களுடனும் நண்பர்களுடனும் சமுதாயத்தினருடனும் மூத்தோர் தொடர்ந்து இணைந்திருக்க ஆதரவளித்தல்