கல்வி அமைச்சும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பும் இணைந்து தொழில்நுட்பக் கல்விக்கழக வேலை-கல்விப் பட்டயத் திட்டத்தின்கீழ் வேலை வழங்குநர்களுக்கான ஊக்கத்தொகையை வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து உயர்த்தப்படவிருப்பதாக கல்விக்கான மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார்.
அந்த உயர்வு இரு வழிகளில் இடம்பெறும் என்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கல்வி அமைச்சிற்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது திரு ஜனில் தெரிவித்தார்.
முதலாவதாக, ஒருவரை வேலைக்கு அமர்த்திப் பயிற்சியளிப்பதற்காக முதலாளிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை $15,000லிருந்து $20,000ஆக உயர்த்தப்படும்.
இரண்டாவதாக, புதிய $20,000 ஊக்கத்தொகையானது பயிற்சிக்காலத்தின் பல முக்கியக் கட்டங்களில் முழுமையாக வழங்கப்படும்.
முழுமையான வேலை-கல்வித் திட்டத்தின்கீழ் தகுதியுள்ள ஒரு பயிற்சியாளருக்கு ஆதரவளிக்கும் முதலாளி இந்த முழுத் தொகையையும் பெறுவார்.
நிதியுதவி பெறுவதற்குத் தேவைப்படும் நிர்வாக நடைமுறைகளைக் குறைப்பதன்மூலம் முதலாளிகள் அந்த ஊக்கத்தொகையைப் பெறுவதை இது மேலும் எளிதாக்கும்.
இந்த மாற்றங்கள் மூலம் அதிகமான நிறுவனங்கள், தொழில்நுட்பக் கல்விக்கழக மாணவர்கள் தங்களின் திறன்களை வளர்த்துக்கொள்ள கூடுதல் வாய்ப்புகளை வழங்க முன்வரும் என்று நம்புவதாக திரு ஜனில் கூறினார்.

