மீண்டும் அதிகரிக்கும் டெங்கிப் பரவல்

மீண்டும் அதிகரிக்கும் டெங்கிப் பரவல்

2 mins read
a49a4472-8c4f-4832-834d-0f0dab541612
தோ பாயோவில் கண்டறியப்பட்ட டெங்கி தொற்றும் அபாயமுள்ள இடங்களில் டெங்கிப் பரவல் தொடர்வதாகக் கூறப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் சென்ற வாரம் மொத்தம் 261 டெங்கிச் சம்பவங்கள் பதிவாயின.

அதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்புநோக்க அந்த எண்ணிக்கை 20 விழுக்காடு அதிகம்.

திங்கட்கிழமை நிலவரப்படி, டெங்கி தொற்றும் அபாயமுள்ள பகுதிகளின் எண்ணிக்கை 56ஆக இருந்தது என்றும் அவற்றில் 12 சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகள் என்றும் தேசிய சுற்றுப்புற வாரியத்தின் இணையத்தளம் குறிப்பிடுகிறது.

10 அல்லது அதற்கு மேற்பட்ட டெங்கிச் சம்பவங்கள் பதிவான பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படுவது வழக்கம்.

சயின்ஸ் பார்க் டிரைவில் 48 டெங்கிச் சம்பவங்கள் பதிவான பகுதி, லெண்டார் லூப்பில் 34 டெங்கிச் சம்பவங்கள் பதிவான பகுதி இரண்டும் ஆக வேகமாக டெங்கிக் கிருமி பரவும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

66 டெங்கிச் சம்பவங்கள் பதிவான அங்லோங் லேனிலும் தோ பாயோவின் இதர டெங்கிப் பரவல் பகுதிகளிலும் தொடர்ந்து டெங்கித் தொற்று பரவுவதாகக் கூறப்படுகிறது.

தோ பாயோ லோரோங் 1, லோரோங் 2 ஆகியவற்றில் மொத்தம் 321 டெங்கிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. லோரோங் 1ஏவில் அந்த எண்ணிக்கை 178ஆகப் பதிவானது.

முன்னதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியிட்ட தகவலில், வரும் மாதங்களில் டெங்கிப் பரவல் அதிகரிக்கக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. முன்னர் பரவலாக அடையாளம் காணப்பட்ட டென்வி-1 ரக டெங்கிக் கிருமியை கொசுக்கள் அதிகம் பரப்புவது அதற்குக் காரணம்.

கடந்த இரண்டு மாதங்களில் டென்வி-1 ரக டெங்கிக் கிருமி அதிகம் பரவுவதாக தேசிய சுற்றுப்புற வாரியம் கூறியுள்ளது.

சிங்கப்பூரில் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து செப்டம்பர் 12ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், ஏறத்தாழ 6,428 டெங்கிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

2022ஆம் ஆண்டு மொத்தம் 32,325 டெங்கிச் சம்பவங்கள் பதிவாயின. ஓர் ஆண்டில் இங்கு பதிவான இரண்டாவது ஆக அதிக எண்ணிக்கை அது. 2020ல் மொத்தம் 35,515 பேர் டெங்கியால் பாதிக்கப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்