சிங்கப்பூரில் இயங்கும் மருத்துவமனைகளில் பலவித புற்றுநோய்களைத் தடுக்க உதவும் ‘ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்’ (HPV) தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பல நாடுகள் இருபாலினத்தவரும் அதை போட்டுக்கொள்வதை பரிந்துரைக்கும் வேளையில் இங்கு இந்தப் போக்கு பரவலாக நிகழ்ந்து வருகிறது. மேலும் தடுப்பூசியால் ஏற்படும் பல நன்மைகள் குறித்து ஆண்களுக்குத் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
ஹெச்பிவி என்பது உலகில் பலருக்கும் தொற்றக்கூடிய பாலியல் சார்ந்த நோயாகும். பாலியல் சேர்க்கையில் ஈடுபடக்கூடிய 80 விழுக்காடு பெரியவர்களுக்கு வாழ்வில் ஏதாவது ஒருவகை ஹெச்பிவி கிருமி தாக்கி அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று 2019ஆம் ஆண்டு நடந்த ஆய்வில் தெரியவந்தது. அந்த ஆய்வை அமெரிக்காவின் தொற்றுநோய் தடுப்பு, கட்டுப்பாடு மையங்கள் ஒருங்கிணைந்து நடத்தின.
அறிகுறியற்று தொற்றும் நோய்
எவ்வித அறிகுறியும் இல்லாமல் ஏற்படும் அந்த நோய் சிகிச்சையின்றி சில நேரங்களில் குணமடைந்தாலும் பெண்களைத் தாக்கும் கர்ப்பப்பை புற்றுநோய்க்கு அது காரணமாக அமையலாம்.
சிங்கப்பூரில், 2020ஆம் ஆண்டுமுதல் ஆண்களுக்கு அந்தத் தடுப்பூசி பயன்பாட்டில் இருந்து வந்தாலும், ஒன்பது முதல் 26 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு தடுப்பூசி மிகவும் முக்கியமானதாக முன்மொழியப்படுகிறது.
2024ஆம் ஆண்டில் அவ்வகை தடுப்பூசிப் போட்டுக்கொண்டோரில் 20 விழுக்காடு ஆண்களாவர். 2025ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 30 விழுக்காடாக அதிகரித்ததாக பார்க்வே ஷென்டன் மருத்துவ இயக்குநர் லிம் வீ பெங் தெரிவித்தார்.

